ஆஹா.. சென்னையில் ஏசி புறநகர் ரயில்கள்! இன்னும் இரண்டே மாதத்தில் டெலிவரி! டிக்கெட் ரேட் எவ்வளவு?
சென்னை: சென்னையில் மின்சார ரயில்களில் செல்வோருக்கு ஒரு மெகா இன்ப செய்தி காத்து இருக்கிறது. மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் தேவை என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மிக விரைவில் அது நிறைவேற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் டெலிவரி செய்யப்பட உள்ளது
தலைநகர் சென்னையில் டிராபிக் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

இதனால் சென்னையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் டிராபிக் உச்சத்தில் இருக்கிறது.
பொது போக்குவரத்து: சாலைகளில் டிராபிக்கை குறைக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை இப்போது பஸ், மெட்ரோ, மின்சார ரயில்கள் பொது போக்குவரத்திற்கான ஆப்ஷனாக இருக்கிறது. இதில் புறநகருக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலும் மின்சார ரயில்களிலேயே பயணிப்பார்கள். அந்த பயணிகளுக்கு இப்போது ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏசி வசதி: சென்னையில் எப்போதும் வெப்பம் என்பது அதிகமாகவே இருக்கும். அதிலும் சமீப ஆண்டுகளில் இது மிக அதிகமாகவே உயர்ந்து வருகிறது. குறிப்பாகக் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் மின்சார ரயில்களில் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால் மெட்ரோவை போலவே ஏசி வசதி கொண்ட ரயில் பெட்டிகளைப் புறநகர் ரயில்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை பல ஆண்டுகளாகவே நிலுவையில் உள்ளது. இருப்பினும், சில காரணங்களால் அது தாமதமாகியே வந்தது. ஆனால், இந்த காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வரப் போகிறது. ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில் இன்னும் இரண்டு மாதங்களில் சென்னைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெலிவரி எப்போது: குளிரூட்டப்பட்ட மின்சார ரயில் பெட்டி இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யப்பட உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.. இந்திய ரயில் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. 12 பெட்டிகளை கொண்ட மூன்று ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு ரயில் மேற்கு ரயில்வேக்கு அனுப்பப்படும் நிலையில், மற்றொன்று தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்த ரயிலில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 2,000 பயணிகள் பயணிக்கலாம்.. இது புறநகர் ரயில் சேவையை மேம்படுத்தும். அந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் நல்ல அனுபவத்தைத் தரும். இதற்கான வரவேற்பைப் பொறுத்து வரும் காலங்களில் கூடுதலாக இதுபோன்ற ரயில்கள் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
டிக்கெட் எவ்வளவு: அதேநேரம் இந்த ஏசி பெட்டிகளுக்கு டிக்கெட் என்னவாக இருக்கும் என்பது குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் இல்லை. தற்போது சென்னை புறநகரில் பெரும்பாலான இடங்களுக்கு ரூ 5 அல்லது 10 ரூபாய் தான் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் ஏசி வசதி கொண்ட பெட்டிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்றே தெரிகிறது. இருப்பினும், இது தொடர்பாக தெற்கு ரயில்வே எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications