முதலமைச்சருக்கு கூலி பணியாளர்களை விட, கூலி படம் தான் முக்கியமோ.. சீறும் சீமான்
சென்னை: சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியை தனியார் நிறுவனத்திற்கு விட மாநகராட்சி நிர்வாகம் முடிவை எதிர்த்தும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள், ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்தார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அப்போது தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. முதலமைச்சருக்கு கூலி பணியாளர்களை விட, கூலி படம் தான் என்று இந்த ஆட்சியை தேர்வு செய்த மக்களையும் சீமான் விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "முதலமைச்சர் கூலிக்கு போராடும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் கூலி படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்களைப் பற்றி சிந்திக்காத அதிகாரவர்க்கத்தை தேர்வு செய்தது மக்களின் தவறு. ஆட்சியாளர்களைப் பற்றி குறை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை. ஆட்சியை நிறுவியதே நாம் தான். எனவே அவர்களைப் பற்றி பேசி பலன் இல்லை.

அரசு பொறுப்பில்லையா
நாங்கள் ஒவ்வொரு மண்டபமாக சென்று தூய்மைப் பணியாளர்களை சந்தித்து வருகிறோம். எல்லாமே அரசின் நிர்வாகத்தில் இருந்து போய் கொண்டிருக்கிறது. இப்படியே சென்றால் எங்கே சென்று நிறுத்துவார்கள் என தெரியவில்லை. இன்றைக்கு அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சத்திற்கு காப்பீடு உள்ளிட்டவை கொடுப்போம் என்கிறது. அப்படியென்றால் அந்த தனியார் நிறுவனத்தின் முதலாளி என்ன செய்வார்.
இவ்வளவு கொடுக்கின்ற அரசு வேலையை நிரந்தரமாக கொடுத்துவிட்டு செல்லட்டுமே. பணியில் எடுக்கும்போதே அரசுப்பணி என்று சொல்லித்தானே எடுத்தார்கள். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பில்லையா. தனியார் முதலாளிகளின் பொறுப்பா. நம் நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள ஸ்வீடன் நாட்டு நிறுவனம் எதுவும் வேண்டுதல் வைத்துள்ளார்களா.
அதிகாரம் இல்லாத மக்கள்
சுகாதாரப் பணியை தனியாருக்கு விற்க வேண்டும் என்று அரசு கொள்கை முடிவை எடுத்துவிட்டது. அதிகாரம் இல்லாத, அரசியல் வலிமை இல்லாத, குரலற்ற மக்களை தான் குறிவைத்து தாக்குகிறார்கள். மீனவ மக்களுக்கு எதிராக நெருக்கடியை கொடுத்தவர்கள், இப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். அதிகார வலிமை இல்லாதவர்களை அடிக்கிறார்கள்.
சென்னையின் ஆதி குடிகளான எங்கள் மக்களை புறநகருக்கு தள்ளி எப்போதோ அதிகாரத்தை குறைத்துவிட்டனர். இப்போது அவர்களை மேலும் நசுக்குகிறார்கள். இவர்களுக்காக போராடுகின்ற தங்கை வளர்மதி, நிலவு மொழி ஆகியோரையும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். சட்டம் படித்த பிள்ளைகளையே காவல்துறையை வைத்து ஒடுக்குகிறார்கள்.
சட்டத்தை வைத்தே நீதிக்கு தடையா
அவர்கள் சட்டம் படித்ததே மக்களை பாதுகாக்க தான். அவர்களையே அடித்து சித்திரவதை செய்து வழக்கு போட்டு சிறை தள்ளியுள்ளனர். அவர்களை போராட்டக் களத்துக்கே வரவிடாமல் தடுப்பதுதான் ஜனநாயகமா. அம்பேத்கர் வகுத்த சட்டத்தை வைத்தே, நீதி கேட்டு போராடுபவர்களை ஒடுக்குகிறார்கள். நம்மிடம் வலிமையான ஆயுதம் வாக்கு இருக்கிறது. இன்னும் 6 மாதங்களில் அதை இந்த அநீதிக்கு எதிராக தூக்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் நிகழும். இந்த முறை கவனம் வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications