”ஒருநாள் தான் லீவு” ஈரோடு இடைத்தேர்தல் பொறுப்பாளர்களே.. தொடர்ந்து கண்காணிக்கும் மு.க.ஸ்டாலின்!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியாற்றும் நிர்வாகிகள் விடுமுறை பெற்று பரிதி இளம்வழுதியின் இல்லத் திருமண விழாவுக்கு வந்துள்ளதாகவும், திருமணம் முடிந்ததும் உடனே தேர்தல் பணிக்கு செல்வதை கண்காணிப்பேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் இல்லத் திருமண விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பரிதி இளம்வழுதியை முதல்முறையாக சிறையில் தான் சந்தித்தேன். அன்றிலிருந்து தொடர்ந்து அவருடன் பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது.

இளைஞரணி உருவாக்கம்
அந்த நிலையில் 1980ம் ஆண்டு திமுகவில் இளைஞர்களுக்கு என்று துணை அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற இளைஞரணி ஓராண்டு நிறைவு விழாவில், பரிதி இளம்வழுதியின் பேச்சு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அதிகமாக கவர்ந்தது. அதனால் அருகில் அழைத்து பரிதி இளம்வழுதிkகு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

இளைஞரணி செயலாளர்
அந்த கூட்டத்தில் தான் இளைஞரணி தலைவராக என்னை நியமிக்க வேண்டும் என்று பரிதி இளம்வழுதி அழுத்தமாக வலியுறுத்தினார். ஆனால் வாரிசு அரசியல் என்ற பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால், திமுக தலைவர் கருணாநிதி ஒரு அமைப்புக் குழுவை அமைத்தார். அந்த குழுவில் திருச்சி சிவா, தாரை மணியன், சிவகங்கையின் பஞ்சவர்ணம், பரிதி இளம்வழுதி ஆகியோருடன் என்னையும் சேர்த்து குழுவை நியமித்தனர். பின்னர் இளைஞரணி அமைப்பாளராக என்னை நியமித்தார்கள். அதையடுத்து தான் என்னை செயலாளராக நியமித்தனர்.

இடைத்தேர்தலில் திமுக வெற்றி
அதேபோல் பரிதி இளம்வழுதி சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது பெரம்பூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் சத்யவாணி முத்து களமிறங்கினார். அவரை எதிர்த்து வெற்றிபெற முடியுமா என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் பரிதி இளம்வழுதியால் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். என் தலைமையில் பிரச்சாரம் செய்து, அந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சியை வீழ்த்தி வெற்றிபெற்றோம். அதுமட்டுமல்லாமல் எழும்பூர் தொகுதியில் 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார்.

1991 தேர்தல் தோல்வி
இதனிடையே சில கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினைகள் வந்தது. அப்போது என்னை விமர்சித்து பரிதி இளம்வழுதி பேசிய போது கூட, நான் ஒருமுறையும் பரிதி இளம்வழுதியை விமர்சித்ததில்லை. அந்த உணர்வோடு தான் அவரை பார்க்கிறேன். 1991 சட்டமன்றத் தேர்தலின் போது, ராஜீவ் காந்தி படுகொலை மூலமாக திமுகவை திட்டமிட்டு தோற்கடித்தார்கள்.

ஒற்றை ஆளாக பரிதி இளம்வழுதி
திமுக சந்திக்காத மிகப்பெரிய தோல்வி அது. அதில் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றோம். ஒன்று துறைமுகத்தில் கருணாநிதியும், எழும்பூரில் பரிதி இளம்வழுதியும் வெல்கிறார்கள். ஆனால் மக்கள் கட்சிக்கு கொடுத்த தோல்வியை ஏற்றுக் கொள்வதாக கூறி கருணாநிதியும் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது ஒற்றை ஆளாக சட்டமன்றம் சென்ற பரிதி இளம்வழுதி ஆளுங்கட்சியை கேள்விகளால் திணறடித்தார்.

ஒருநாள் மட்டுமே விடுமுறை
அவரின் மகன் பரிதி இளம்சுருதியை பார்க்கும் போதெல்லாம் பரிதி இளம்வழுதி தான் நினைவுக்கு வருவார். இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் கலந்துகொள்வார்கள் என்று போடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகள் காரணமாக ஏராளமான நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அதேபோல் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் உள்ள சிலர், வேலைகளுக்கு நடுவே விடுமுறை கேட்டு அனுமதி பெற்று இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இதை முடித்துவிட்டு உடனே ஈரோட்டிற்கு புறப்பட இருக்கிறார்கள். புறப்படுகிறார்களா என்று கண்காணிக்கும் நிலையில் நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications