“இது என்ன இன்னொரு கோட்டை..?” ஸ்பெயினில் ஆச்சரியத்துடன் கேட்ட ஸ்டாலின்!
சென்னை: ஸ்பெயினில் உள்ள பிராடோ மியூசியத்தை பார்த்து "இது என்ன இன்னொரு கோட்டை?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் அழகையும், வாழ்வியல் முறைகளையும் தனது கடிதம் மூலம் எளிமையாக விவரித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;
ஸ்பெயின் நாட்டின் விளையாட்டுத் திடல்களில் கால்பந்து விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். நம் நாட்டு இளைஞர்களுக்குக் கிரிக்கெட் போல, அந்த நாட்டிலும் அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் கால்பந்து மிகவும் பிரபலம். உலகக் கோப்பை, ஐரோப்பியக் கோப்பை ஆகியவற்றுடன் கால்பந்து கிளப்கள் நடத்தும் போட்டிகளும் மிகவும் புகழ் பெற்றவை. நாங்கள் சென்றிருந்த நேரத்திலும் அங்கே கால்பந்து போட்டிகள் நடைபெறுவதை அறிந்து கொண்டோம்.

டொலிடோ நகரத்தின் அழகை ரசித்ததுடன், அதன் பழமைமிக்க வரலாற்றுச் சிறப்பையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். 'மூன்று பண்பாடுகளின் நகரம்' என்ற சிறப்புப் பெயர் டொலிடோவுக்கு உண்டு. முதலில் யூதர்கள், பிறகு கிறிஸ்தவர்கள், அதன்பின் முஸ்லிம்கள் என மூன்று மதங்களைச் சார்ந்த மன்னர்களின் படையெடுப்பு நிகழ்ந்திருந்தாலும், மூன்று மதத்தின் மக்களும் அவரவர் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு, ஒற்றுமையாக வாழ்ந்த - வாழ்ந்து வருகிற பெருமை டொலிடோ நகரத்திற்கு உண்டு.
வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இன்றைய ஆட்சியாளர்கள் அதை இடித்துத் தகர்த்திடவும் இல்லை, மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்துத் தேர்தல் இலாபம் தேடும் அரசியலும் அங்கு இல்லை. மூன்று மதத்தினரின் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நகரமாக டொலிடோ இன்றும் திகழ்வதைக் காண முடிந்தது. இந்தப் பண்பாட்டுப் பெருமையும் பன்முகத்தன்மையும்தான் இந்தியாவுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியது என்பதை நாம் மறந்துவிட முடியுமா?
கோட்டைகள் போலவே பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரிய தேவாலயங்களான கதீட்ரல்களும் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் கட்டிய திருக்கோயில்கள் பலவும் திராவிடக் கட்டடக் கலையின் சின்னங்களாக விளங்குவதுபோல, ஐரோப்பியக் கட்டடக் கலையின் அடையாளங்களாக இந்த தேவாலயங்கள் திகழ்கின்றன.
வரும் வழியில், "இது என்ன இன்னொரு கோட்டை?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். "இது கோட்டை அல்ல, பிராடோ மியூசியம்" என்று தெரிவித்தனர். ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக 1819-ஆம் ஆண்டில், அரண்மனை போன்ற இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நமது மன்னர்களின் வரலாற்றைக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் தெரிந்துகொள்வது போல, ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாறு - ஆட்சி முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள அவர்கள் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களே சான்றுகளாக உள்ளன. அத்தகைய பழமைமிக்க ஓவியங்களைப் பாதுகாத்து, அவற்றின் வாயிலாக 12-ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் பிராடோ அருங்காட்சியகம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications