என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்களுக்கு வேலை! பிரதமரை தலையிடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை: என்.எல்.சி. வேலைவாய்ப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை தலையிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
என்.எல்.சி.யில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பொறியாளர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்திடக்கோரி பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

நிலம் வழங்கியவர்கள்
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேட் தேர்வு
மேலும் கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நினைவூட்டியுள்ளார்.

சாதகமான முடிவு
என்.எல்.சி.யில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு விரைவில் சாதகமான முடிவு எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications