தீனா... மூனா... கானா... ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட பாடல்! நினைவுகூர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: திமுகவை திரையுலகத்தில் பரப்பிய போது தீனா... மூனா... கானா... என்ற பாடல் பிரபலப்படுத்தப்பட்டதாக பழைய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

தீனா.. மூனா.. கானா..
தி.மு.க. என்று சொல்வதைத் திரையுலகத்தில் பரப்பியபோது, ஒரு பாடல் பிரபலப்படுத்தப்பட்டது. அந்தப் பாடலை எழுதியவர் மதிப்பிற்குரிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள். பாடி நடித்தவர் கலைவாணர் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நான்கே ஆண்டில் வந்தது அந்தப் படம். தொண்டர்களுடைய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது மட்டுமல்ல, தி.மு.க. என்றால் என்ன என்பதை சொன்னது அந்தப் பாடல். "தீனா... மூனா... கானா... எங்கள் திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று கலைவாணர் பாடுவார்.

தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பவியலுக்கு அடித்தளம் அமைத்ததே கழக அரசுதான். இதற்கு கம்பீரமான சாட்சியாக இன்றும் எழிலுடன் நிற்கிறது டைடல் பார்க். 1996-ஆம் ஆண்டு முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது தொடங்கிய தகவல் தொழில்நுட்பப் புரட்சிதான் கடந்த 27 ஆண்டுகள் அத்துறை மகத்தான வளர்ச்சியைப் பெறுவதற்குக் காரணம். உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு கலைஞர் தான் அடித்தளம் அமைத்தார்.

உலகெங்கும் தமிழர்கள்
தமிழர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும் - அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும் பேசவும் படிக்கவும் மறந்த தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழைச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மொழிகளில் தமிழ்ப் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா, குவைத்
அமெரிக்கா, குவைத், ஓமன், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நம் உறவுகளும் இணைந்துள்ளார்கள். ஒரு காலத்தில் பேராசிரியர் செந்தமிழ் அரிமா என்று போற்றப்பட்ட இலக்குவனார் அவர்கள், தமிழ்ப் காப்புக் கழகம் தொடங்கினார். அது தமிழைக் காக்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது. தமிழை நாம் பாதுகாத்துவிட்டோம்.இது தமிழைப் பரப்ப வேண்டிய காலக்கட்டம். அதனால் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கி இருக்கிறோம்.

28 தொடர்பு மையங்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 தொடர்பு மையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த ஒராண்டில் மட்டும் 17 புதிய தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தகங்கள் மின்னுருவாக்கம் செய்யப்படுகின்றன. கணினித் தமிழுக்குத் தேவைப்படும் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications