ரூ.31.42 கோடி.. 256 குடியிருப்புகள்! உருமாறும் சென்னை மாநகராட்சி - நேரில் ஆய்வு செய்த இறையன்பு
சென்னை: ஆண்டிமானியம் தோட்டம், வன்னியபுரம், மற்றும் நாட்டான் தோட்டம் திட்டப்பகுதிகள் மற்றும் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகளையும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ஆண்டிமானியம் தோட்டம் திட்டப்பகுதி-Vல் 480 பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கப்பட்டு வரும் பணிகளையும் வன்னியபுரம் திட்டப்பகுதியில் 192 பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் விரைவில் இடிக்கப்பட உள்ள 266 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பழைய குடியிருப்புகளை பாதுகாப்பான முறையில் இடித்து புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அத்துடன் இடிக்கப்பட இருக்கும் பழைய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடம் பேசி அவர்களை அங்கு இருந்து விரைவில் அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியினை விரைவில் தொடங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.31.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 256 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பெரும்பாக்கம் திட்டப்பகுதி 1 மற்றும் முன்மாதிரி திட்டப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்து உரையாடினார். அதேபோல் பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து பேசிய அவர், "இக்கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் ஆர்வமாக கல்வி கற்று வருகின்றனர் என மாணவ தங்களுடைய ஆசிரியர்கள் கூறியதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
இதில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரியாக உள்ளீர்கள் என்பதை அறிந்து நான் பெருமை கொள்கிறேன். கல்வியை நாம் ஒரு உயர்ந்த நோக்கத்தோடு கற்க வேண்டும். நாம் முன்னேறி உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமல்ல நம்மை போல் கஷ்டபடும் மக்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கல்வி கற்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் பயின்ற பெண்கள் தற்போது உயர் கல்வியை தொடர்ந்து வருகிறார்கள் அவர்களை ஊக்குவிப்பதற்காக புதுமை பெண் என்ற திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்." என தெரிவித்தார். மேலும் தோழமை தொண்டு நிறுவனம் மற்றும் சுமைதாங்கி தொண்டு நிறுவனம் சார்பில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,81,500-க்கான காசோலையை இறையன்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications