குழந்தைக்கு எமனாக மாறிய ‘பலூன்’.. மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி! ஷாக் சம்பவம்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பலூனை விழுங்கிய குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலூனை விழுங்கிய சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே மாகாணிப்பட்டு கிராமத்தில் சாம் என்ற 3 வயது சிறுவன் பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத வகையில் பலூனை விழுங்கியதாக கூறப்படுகிறது. பலூனை விழுங்கிய சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளான்.

இதைப்பார்த்த அந்தச் சிறுவனின் தாய், பதறியடித்தபடி மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்தபோது, ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு மகனை மடியில் தூக்கி வைத்து தாய் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
குழந்தைகளின் மிக விருப்பமான விளையாட்டுப் பொருளான பலூன், 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைத்து விழுங்க முயற்சிக்கும், எனவே சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை தரும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications