சிட்டா.. விவசாயிகள் தனி அடையாள எண் பெற கெடு.. நில ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு
சென்னை: விவசாயிகள் தனி அடையாள எண் பெற வேண்டுமானால், உரிய ஆவணங்களை வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வேளாண் துறை கெடு விதித்துள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, வரும் காலங்களில், மத்திய அரசு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள் வழங்கப்படும் என்பதால், இந்த கெடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் சாமானிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அரசு, ஆதார் எண் போன்ற தனி அடையாள எண் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசின், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு, ஆதார் எண் போல, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது.

இதற்காக மத்திய அரசின், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட, விவசாயிகள் பதிவு, நிலம், பயிர் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறை
மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி, தமிழ்நாடு முழுவதும் மின்னணு முறையில், விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்படுகிறது. இதற்காக, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பணியை, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிட்டா, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போனுடன் சென்று, விபரங்களை பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது.
தனி அடையாள எண்
தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, வரும் காலங்களில், மத்திய அரசு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள், பிரதமரின் விவசாய உதவித்தொகை, பயிர் கடன், கிஸான் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இப்பணியை முடித்தால், மத்திய அரசிடம் இருந்து, தமிழக வேளாண் துறைக்கு, 1,200 கோடி ரூபாய் கிடைக்கும்.
எனவே, இந்த மாதம் 31ம் தேதிக்குள், விவசாயிகள் தங்கள் விபரங்களை தாக்கல் செய்து, தனி அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என, வேளாண் துறை விவசாயிகளுக்கு கெடு விதித்துள்ளது. தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, ஏப்ரல் முதல் மானிய உதவி, கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்திய அரசு திட்டம் கிடைக்க வேண்டுமா?
இதுபோல வே, 2025-2026 நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN) பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற வேண்டுமானால், தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் தங்களுடைய கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் (அ) கிராம நிர்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications