ஆளுநர் தந்த ஒப்புதல்.. மாநில சிறுபான்மை ஆணைய தலைவராகும் பாதிரியார்.. யார் தெரியுமா? தமிழக அரசு ஆணை
சென்னை: மாநில சிறுபான்மை ஆணைய தலைவராக பாதிரியார் ஜோ அருண், துணை தலைவராக எம்எம் அப்துல் குத்தூஸ் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மாநில சிறுபான்மை ஆணைய தலைவரின் பதவிக்காலம் என்பது 3 ஆண்டுகளாகும்.

இந்நிலையில் தான் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர், உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய தலைவர், துணை தலைவர், உறுப்பினர் நியமனம் செய்வதற்கான பணியை தமிழக அரசு தொடங்கியது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்என் ரவி அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பாதிரியார் ஜோ அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை தலைவராக எம்.எம்.அப்துல் குத்தூஸ் என்கிற இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஹாமில்டன் வெல்சன், சொர்ணராஜ், நாகூர் நஜாமுதீன், பிரவீன் குமார் தாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், முகம்மது ரபீ மற்றும் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளதால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications