CAA: ரிச்சி தெருவில்.. பேனாவில் புகுந்து புறப்பட்ட சிஏஏ ஆதரவு பிரச்சாரம்.. கடை முன்பு களேபரம்
சிஏஏவுக்கு ஆதரவாக பேனாவை பரிசாக வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை: ரிச்சி தெருவே பரபரப்பாகிவிட்டது.. செல்போன் கடையில் சிஏஏவுக்கு ஆதரவாக பேனாவில் எழுதி கஸ்டமர்களுக்கு செல்போன் கடைக்காரர் பரிசு வினியோகித்துள்ளார்.. இதனால் சம்பந்தப்பட்ட கடையை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்ட நிலையில், அங்கு இந்து முன்னணியினரும் திரண்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, பாஜகவும், அதன் கூட்டணி கட்சியினரும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சென்னை மவுண்ட்ரோடு ரிச்சி தெருவில் அற்புதா மொபைல்ஸ் என்ற செல்போன் கடையை நடத்தி வருபவர் தினேஷ். இவர் தனது கடையில் செல்போன் வாங்க வரும் கஸ்டமர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக எழுதிய பேனாவை பரிசாக அளித்து வந்துள்ளார்.

வியாபாரிகள்
அதாவது "we support CAA NR:" என்று அந்த பேனாவில் அச்சிடப்பட்டிருந்தது.. இதனால், தினேஷ் கடைக்கு எதிரே செல்போன் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர், இப்படியெல்லாம் பரிசு பொருளை தந்தால், வியாபாரம் பாதிக்கும் என்றுகூறி தினேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தினேஷின் சகோதரர், இந்து முன்னணியில் பிரமுகர் என்று கூறப்படுகிறது..

தினேஷ்
இதனால், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தினேஷின் கடைக்கு சென்று சிஏஏவுக்கு ஆதரவான பிட் நோட்டீஸ்களை கஸ்டமர்களிடம் வழங்க ஆரம்பித்துவிட்டனர்.. இதுதான் பெரிய பிரச்சனையாக வெடித்துவிட்டது.

ரிச்சி தெரு
அடுத்த சில மணி நேரத்தில், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த அமைப்பினர் சம்பவ இடத்தில் குவிந்துவிட்டனர்.. தகவலறிந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களும் அப்பகுதியில் கூடிவிட்டதால், ரிச்சி தெரு பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.. இஸ்லாமியர்களும், இந்து முன்னணியினரும் திரண்டு விட்டதால், பதற்றமும் ஏற்படும் சூழலும் உருவானது.. ஆனால் உடனடியாக போலீசாரும் குவிக்கப்பட்டுவிட்டனர்.

விசாரணை
இதையடுத்து, தன்னை சிலர் மிரட்டுகிறார்கள் என்று தினேஷ் சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனில் புகார் தந்தார்.. விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் செல்போன் கடை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அதனடிப்படையில் விசாரணை செய்தனர்.. பின்னர் கூடியிருந்த மக்களை சுமூகமாக பேசி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications