இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.. மத்திய அரசிடம் கறாராக கூறிய முதல்வர் பழனிச்சாமி
சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங்கிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கறாராக கூறிவிட்டார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 1990-ல் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

அது போல் வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய மின்சார திருத்தச் சட்டம் தொடர்பாக மாநிலங்களிடம் கருத்து கேட்டுள்ள மத்திய அரசு, மின்சார மானியங்களை ரத்து செய்யும் வகையில் நிபந்தனைகளையும் விதித்தது.
இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் கடந்த மே மாதம் சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலவச மின்சாரத்தை நிறுத்த போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை கட் அண்ட் ரைட்டாக வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் சந்தித்தார். மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கண்டிப்பாக தொடர வேண்டும்.
அது போல் வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்க வேண்டும் என கண்டிப்புடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அது போல் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்திற்கு எதிரான பிரிவை நீக்க மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications