மைக்கை பிடித்த ஸ்டாலின்.. உதயசூரியனை "கரெக்ட்" செய்து.. அப்படியே ஆச்சரியமாய் பார்த்த அப்பாவு..!
எம்எல்ஏவின் பிழையை திருத்தி வாசித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வாய் தவறுதலாக, ஒரு வார்த்தையை திமுக எம்எல்ஏ சொல்லிவிட்டார். இதையடுத்து, முதல்வர் அதை திருத்திய சம்பவம்தான் ஆர்வமுடனும், ஆச்சரியமுடனும் பேசப்பட்டு வருகிறது.
Recommended Video
கருணாநிதி , ஜெயலலிதா காலங்களில் சட்டசபை நிகழ்வுகளே பெரும் சுவாரஸ்யமாக இருக்கும்.. தினந்தோறும் அரசியல் பரபரப்புகள் அவையில் நடந்தாலும், அவ்வப்போது சிரிப்பலையும் எழுந்து அடங்கும்.. அதிலும் துரைமுருகன் சும்மாவே இருக்க மாட்டார்.. எதையாவது ஜோக்காக பேச போய், ஜெயலலிதாவே சிரித்து விடுவார்.
மேலும் பல தருணங்களில் கட்சி பேதமின்றி உறுப்பினர்கள் பேசி கொள்வார்கள்.. அரசியல் நாகரீகம் தழைத்து வரும் திமுக அரசியல், இந்த முறையும் இதுபோன்ற சுவையான நிகழ்ச்சிகள் பேரவையில் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

திமுக
அதேசமயம், திமுக எம்எல்ஏக்கள் அனைவருமே, தங்கள் தொகுதிகள் குறித்த பிரச்சனையை அவையில் பேச வேண்டும், கேள்விகளை எழுப்ப வேண்டும், அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதிலை தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் 2 நாளைக்கு முன்பு தன்னுடைய எம்எல்ஏக்கள் அமைச்சர்களை கேட்டு கொண்டிருந்தார்.

கூட்டம்
அதன்படியே நேற்று 2ஆவது நாளாக கூட்டத்தொடர் நடந்தது.. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மொழியப்பெற்று விவாதமும் தொடங்கியது.. அப்போது திமுக எம்எல்ஏ உதயசூரியன் பேசும்போது, "நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நீதிபதி ராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை பெற்று, தேவையான சட்டங்களை இயற்றி, நீட் தேர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ளும்" என்றார்.. இதை முதல்வர் கவனித்துவிட்டார்..

உதயசூரியன்
உடனே எழுந்து நின்று மைக்கை பிடித்து, "நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுவதற்கு பதிலாக, உறுப்பினர் நீட் தேர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கை என, தவறாக திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பதற்றத்தில் சொல்லி விட்டார்.. எனவே, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என, தவறை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று பேரவை தலைவரிடம் சொன்னார்.

திருத்தம்
இதை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உட்பட பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தையை மாற்றம் செய்து பதிவு செய்து கொண்டார் அப்பாவு... அவை நிகழ்வுகளை, அதிலும் தன்னுடைய எம்எல்ஏவின் பேச்சினையும், ஒரு முதல்வர் எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனிக்கிறார் என்பதும், அந்தவகையில் எந்நேரமும் ஸ்டாலின் விழிப்புடனேயே இருக்கிறார் என்பதும் இதன்மூலம் தெரியவருகிறது என்று பூரித்து போய் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்..!












Click it and Unblock the Notifications