விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. நாட்டுக்கே முன்னுதாரணமாக விசாரணை- முதல்வர் உறுதி
சென்னை: விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரை இந்தியாவுக்கே முன் மாதிரியாக திகழும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை போலவோ, வண்ணாரப்பேட்டை பாலியல் வன்கொடுமை வழக்கை போலவோ இல்லாமல் விருதுநகர் வழக்கு உடனடியாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே விரைந்து முடிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு இதுவாகத்தான் இருக்கும் என்றும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் எனவும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

விருதுநகர் வழக்கு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து புள்ளி விவரத்துடன் பேசிவிட்டு அமர்ந்த முதல்வர் ஸ்டாலினிடம், விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து அதிமுக கேள்வி எழுப்பியதுடன் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தது.

ஸ்டாலின் பதில்
அதிமுக குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை போலவோ, வண்ணாரப்பேட்டை பாலியல் வன்கொடுமை வழக்கை போலவோ இல்லாமல் விருதுநகர் வழக்கு விரைந்து முடிக்கப்படும் என்றும் இந்தியாவிலேயே விரைந்து முடிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு இதுவாகத்தான் இருக்கும் எனவும் கூறினார். மேலும், தற்போது அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் எனவும் உறுதிபடக் கூறினார்.

முன் மாதிரி
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கிடைக்கும் நீதி, இந்தியாவில் உள்ள மற்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு முன் மாதிரியாக திகழும் என முதலமைச்சர் ஸ்டாலின் மிக உறுதியாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த 24 மணி நேரத்திற்குள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்த நிகழ்வையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

பெண் பிள்ளைகள்
பாலியல் வன்கொடுமை புகார் மீதான வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டும் இந்த உறுதியும், வேகமும் பொதுமக்களிடையே குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. முதலமைச்சர் கூறுவதை வைத்து பார்த்தால் மே மாதம் இறுதிக்குள் விரைந்து இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications