இனிதான் ஆட்டமே.. ஸ்டாலின் ரிடர்ன்ஸ்! ஸ்பெயினில் இருந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர்
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் காலை சென்னை திரும்பினார்.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்றார். தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் இவருடன் ஸ்பெயின் சென்று இருந்தார். ஸ்பெயின் செல்லும் முன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர், "கடந்த இரு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

அதேபோல, இம்முறை ஸ்பெயின் நாட்டுக்கு நான் மேற்கொள்ளும் பயணத்திலும், பல முன்னணி நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை எடுத்துக்கூறி, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதலீடுகளை ஈர்க்க உள்ளேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் இலக்கு தொலைவில் இல்லை." என்று தெரிவித்து இருந்தார். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற அவர், அந்நாட்டின் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெயின் நாட்டின் தொழில் துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன். எனது அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய GIM 2024 ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள, தொடங்கவுள்ள முன்னணி நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன்.
நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநாடு அமைந்தது." என்று தெரிவித்து இருந்தார். அதன் பின்னர் ரோகா குழும இயக்குநர் கார்லோ வெலாஸ்கெஸ் மற்றும் ரோகோ இந்தியா நிர்வாக இயக்குநர் நிர்மல் குமாரை சந்தித்து பேசிய முக ஸ்டாலின் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்து இருந்தார்.
பின்னர் ஹாபாக் - லாயிடு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி ஜெஸ்பெர் கான்ஸ்துருப் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆல்பெர்ட் லொரெண்டேவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் அந்த நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்து உள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் தொழிற் பூங்காக்கள், கார்கோ முனையங்களை இந்த நிறுவனம் அமைக்க உள்ளதாக கூறி இருக்கிறார்.
இறுதியாக கெஸ்டாம்ப், டால்கோ, எடிபன் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாட்டில் எடிபன் நிறுவனம் ரூ.540 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருந்தார். "ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக நிறைவடைகிறது. முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து அலோசனை மேற்கொண்டேன்." என்று அவர் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் சென்னை புறப்பட்ட நிலையில் இன்று காலை அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
ஸ்பெயினில் இருந்தபடியே தமிழ்நாடு பட்ஜெட் உள்ளிட்ட அரசு நிர்வாக பணிகள் தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட அவர், நாடாளுமன்ற தேர்தல் பணிகளையும் கண்காணித்து வந்தார். முதலமைச்சர் சென்னை வந்தவுடன் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications