‘ராம்சர்’ பட்டியலில் மேலும் 2 தமிழக இடங்கள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.. அதென்ன ராம்சர் தளம்?
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிவித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
Ramsar Convention என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, பல்வேறு உயிர்களின் வாழ்விடமாக விளங்கும் தன்மை, அவற்றின் தாங்குநிலை பயன்பாடு தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம். ராம்சர் அங்கீகாரம் என்பது ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்ற நகரத்தில் கையெழுத்தானது. அதன்படி, இந்த அங்கீகாரம் பெறும் இடங்கள் ராம்சர் தளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1982 முதல் 2013ஆம் ஆண்டு வரை, ராம்சர் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டன, 2014 முதல் 2022 வரை, 49 புதிய ஈரநிலங்களை ராம்சர் தளங்களின் பட்டியலில் இந்தியா சேர்த்தது. 2022-ல் மொத்தம் 28 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் 75 ராம்சர் தளங்கள் இருந்தன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 14 ராம்சர் தளங்கள் இருந்தன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் காப்பகம் என மேலும் இரு இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக, தமிழ்நாட்டில் இருந்து 16 இடங்கள், ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் காப்பகம் என மேலும் இரு இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து #RAMSAR பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின், 2022-ஆம் ஆண்டில் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்கான சான்றாக இச்சாதனை விளங்குகிறது.
தமிழ்நாடு இத்தகைய உலக அங்கீகாரம் பெற உழைத்த தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் முதலிய அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். #பசுமைத்_தமிழ்நாடு!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications