"உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்" டிஸ்சார்ஜான ஸ்டாலின் பதிவு!
சென்னை: உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன் என்று அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நலம்பெற்று வீடு திரும்பினேன் என்று கூறியுள்ள ஸ்டாலின், அக்கறையுடன் நலம் விசாரித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்றும் கூறியுள்ளார்.
ஜூலை 21ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்பின் அவருக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட, அடுத்தநாள் தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கூடுதல் பரிசோதனை எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டன. அதில் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பு மாறுபாடு காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதன்பின் அப்போலோ மருத்துவமனையில் இருந்தவாறே ஸ்டாலின் அரசுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
தொடக்கத்தில் 3 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் ஓய்வு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 6 நாட்களாக மருத்துவமனையில் இருந்தே ஸ்டாலின் அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். இதனால் எப்போது ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் ஸ்டாலின் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அதன்பின் 7 நாட்களுக்குப் பின் குடும்பத்தினருடன் காரில் ஸ்டாலின் வீடு திரும்பினார். இந்த நிலையில் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நலம்பெற்று வீடு திரும்பினேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதியரசர்கள், அரசு அதிகாரிகள், திரைக் கலைஞர்கள், என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்! உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் ஒரு வீடியோவையும் ஸ்டாலின் இணைத்துள்ளார்.
அதில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நேரடியாக நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் ஸ்டாலினை வரவேற்க வழிநெடுக திமுக தொண்டர்கள் நின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்தவாறு ஸ்டாலின் வீடு திரும்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications