பொங்கல் பரிசுத்தொகை.. ரூ. 1000 போச்சு.. இது சரிப்பட்டு வராது! ஸ்டாலின் மேஜைக்கு போன ரெட் நோட்!
சென்னை: பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவு மக்களிடையே எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம்.
பொங்கல் பரிசு தொடர்பான முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்து உள்ளனர்.
விமர்சனங்கள்:
பொதுவாக பொங்கலுக்கு 21 பொருட்கள் வழங்கப்படும். அதேபோல் ரூ.1000 வழங்கப்படும். ஆனால் நிதி நிலவரங்களை காரணம் காட்டி இந்த முறை தமிழக அரசு ரூ.1000 பணம் வழங்கவில்லை.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளதாம். எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக பயன்படுத்த போகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது. அந்த தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இதை பயன்படுத்தலாம். மக்கள் இடையே இது எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதாம்.
ரூபாய் 1000 ஏன் இல்லை:
பொங்கல் பரிசுத்தொகை இந்த முறை குறைக்கப்பட்டு உள்ளது. அதே போல் ரொக்கம் ரூபாய் 1000 வழங்கப்படவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து உள்ளது. ஆனால் மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. இதனால் நிதி நெருக்கடி அதிகம் உள்ளது.
இதை சமாளிக்கவே தமிழ்நாடு அரசு இந்த முறை பொங்கலுக்கு ரொக்க பரிசு கொடுக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அரசு அறிக்கை:
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட விரிவான அறிக்கையில், 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.20.94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும் , இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.
இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெல்லம் வருமா?:
கடந்த வருடம் வெல்லம் வழங்கப்படவில்லை. வெல்லம் உருகிவிடுகிறது.. அதேபோல் இது தொடர்பாக புகார்கள் வைக்கப்படுகின்றன என்பதால் சர்க்கரை வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வெல்லம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு காரணமாக இந்த முறை வெல்லம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்றபடி ரூ.1000 தொடர்பான அறிவிப்பு வெளியாவது சந்தேகம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications