"சக்ஸஸ்".. மீட்டிங் முடிவில் ஸ்டாலின் "மேஜர்" உத்தரவு.. மழை முடிஞ்சதும் இதுதான் முதல் வேலையாம்.. ஆஹா
சென்னை: தமிழ்நாட்டில் மழை முடிந்ததும் செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மீட்டிங்கில் உத்தரவிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதையடுத்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை கொஞ்சம் குறைந்த கனமழை, மீண்டும் நேற்று மாலைக்கு பின் தீவிரம் அடைந்தது.
நேற்று இரவும் சென்னையில் கனமழை பெய்தது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை
சென்னையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது.

வெள்ளம்
இந்த மழை காரணமாக முன்பு போல சென்னையில் வெள்ளம் ஏற்படவில்லை. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வேகமாக வடிந்து உள்ளது. கத்திப்பாரா பாலம், கேகே நகர், ஓஎம்ஆர் சாலையில் சில பகுதிகள் தவிர பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை. இந்த பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் கால்வாய் திட்டம் முழுமையாக முடியவில்லை என்பதால் அங்கு மட்டும் வெள்ளம் ஏற்பட்டது. மற்ற சாலைகளில் காலையில் பொழுது விடிவதற்குள் வெள்ளம் வடிந்துள்ளது. இரவெல்லாம் மழை பெய்தும் கூட வெள்ளம் பல இடங்களில் அதிகாலையில் சட்டென வடிந்துள்ளது.

கழிவு நீர் கால்வாய்
மக்களும் இங்கே எளிமையாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 4-5 மாதங்களாக கட்டப்பட்டு வந்த கழிவு நீர் கால்வாய்கள்தான் இதற்கு காரணம். வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வந்தன. . சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வருகின்றனர். பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். இந்த பணிகள் தற்போது 90 சதவிகிதம் முடிந்துள்ளது.

மீட்டிங்
இந்த நிலையில்தான் சமீபத்தில் மழை தொடர்பாக நடந்த மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதன்படி.. மழை வெள்ளம் தொடர்பான அப்டேட் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது. சென்னை வெள்ள நீர் வெளியேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கால்வாய்கள் அமைக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் வேகமாக வெளியேறுவது சந்தோசம் அளிக்கிறது. இது ஒருவகையில் வெற்றிதான்.

வெற்றி
ஆனால் இதற்காக மெத்தனமாக இருக்க கூடாது. மீதம் உள்ள பணிகளை மழை இல்லாத நாட்களில் செய்து விடுங்கள். மழை முடிந்தததும் மொத்தமாக பணிகளை முடித்துவிடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக சென்னையில் பிரதான சாலைகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால் சில உள் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இங்கு கால்வாய்கள் அமைக்கப்படவில்லை.

சிறிய சாலைகள்
சில சிறிய உள் சாலைகளில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இந்த சாலைகளில் மழை முடிந்ததும் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மழை முடிந்ததும் இந்த பணிகளை உடனே தொடங்குங்கள், மேலும் குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் சாலை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மீட்டிங்கில் குறிப்பிட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications