அன்று தொழிலாளி..இன்று முதலாளி..முதல்வர் ஸ்டாலினால் முன்னேறிய 2 குடும்பங்கள்
சென்னை: ஒருவருக்குச் சரியான நேரத்தில் செய்யும் உதவி அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். அப்படியான 2 குடும்பங்களின் கதைகள்தான் இவை. 'முதல்வரின் முகவரி' மூலம் நேரடியாகப் பலன் பெற்று இன்று தன்னம்பிக்கை தம்பதிகளாக வலம் வருகிறார்கள். அதற்குக் காரணம் முதல்வர் ஸ்டாலின்.
உழைத்தால் உயரலாம் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது ஒரு வேள்வி. அப்படி தன் உழைப்பால் உயர விரும்பிய ஒரு முகம்தான் அம்மு. இவர் சென்னையில் வசிக்கிறார். ஆதிதிராவிடர் நலத்துறையான 'தாட்கோ' மூலமாகக் கடன் உதவி பெற்று இன்று 2 பேருக்கு வேலை வழங்கக் கூடிய அளவுக்கு வாழ்வில் ஒருபடி முன்னேறி இருக்கிறார்.

"என் வீட்டுக்காரர் ஒரு டைலர். அவருடைய கடையில்தான் நானும் வேலை பார்த்து வந்தேன். 5வருடத்திற்கு முன்னால் எனது கணவர் விபத்தில் சிக்கிவிட்டார். அவரால் முன்பைப்போல நடக்கமுடியவில்லை. கடையையும் முன்புபோல நடத்தமுடியவில்லை. வருமான ரீதியாக எங்கள் குடும்பம் சிரமத்தில் சிக்கிக் கொண்டது. அப்போது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பல மாதங்கள் ஒருவழியும் தெரியாமல் கஷ்டத்திலிருந்தேன்.

என் கணவருக்கும் எனக்கும் இந்த டைலரிங் வேலை மட்டும்தான் தெரியும். வேறு எந்த வேலையும் தெரியாது. இப்படி கஷ்டத்திலிருந்த காலத்தில்தான் கொரோனா ஊரடங்கும் வந்தது. மேலும் மேலும் சோதனை வந்ததை நினைத்து மனரீதியாக ஒடுங்கிப்போய்விட்டோம்.

அந்தநேரத்தில்தான் 'முதல்வரின் முகவரி' என்ற ஆப் பற்றிய ஒரு டிவியில் பார்த்தேன். செய்தியில் சொன்னார்கள். அதைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. உடனே ஆப் ஐ நான் டவுன்லோட் செய்தேன். அதில் எனது கோரிக்கையை எழுதி அனுப்பி வைத்தேன். நடந்தால் சந்தோஷம்தானே? செய்துதான் பார்ப்போமே என்றுதான் அனுப்பினேன்.

அனுப்பியதும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். இந்த ஆட்சியில் பொதுமக்களாகிய நாங்கள் ஒரு கோரிக்கை அனுப்பினால் அதை பெற்றுக் கொண்டு அங்கே போ, இங்கே போ என்று அலைகழிக்காமல் உரிய முறையில் அதற்குப் பதில் தருகிறார்கள்.
அப்படியே கடன் வழங்கும் டிப்பார்ட்மெண்ட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். எனக்கு வங்கிக் கடன் உடனே வழங்கப்பட்டது. அதை வைத்துத் தான் கடைக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் வாங்கினேன்.

இந்தக் கடன் மட்டும் கிடைக்கவில்லை என்றால் எங்கள் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்றே சொல்ல முடியாது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என் குடும்பமே கடமைப்பட்டுள்ளது. அவர் இல்லை என்றால் எங்கள் வாழ்க்கை முடங்கிப் போய் இருக்கும். அவர் செய்த உதவியை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன். அவருக்கு என் நன்றி" என்கிறார்
அம்முக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைவாடைகை, வீட்டு வாடகை, குழந்தைகள் படிப்பு, சாப்பாட்டுக்குத் தேவைக்கான பொருளாதாரம் என அனைத்திற்கும் ஒரே ஆதாரம் இந்த டைலரிங்க் கடைதான்.
அதைக் கொண்டே இவர் ஜீவித்து வருகிறார். அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அரசு உரிய நேரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இவர்களுக்கு உதவி இருக்கிறது. அதற்குச் சரியான சாட்சி இந்த அம்மு.

நமக்கு எதிர்காலம் உள்ளதா எனக் கவலையில் இருண்டிருந்த இவர் வாழ்க்கை, இன்று இருவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் முதல்வர் ஸ்டாலின்.
அவரிடம் பேசிவிட்டு வெளியே நம்மை, ஒரு நிமிடம் நிறுத்தி எதையோ சொல்லவந்தார் அம்மு. நாம் அவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்டு காதுகொடுத்தோம்.
அவர், "சமீபத்தில் தொலைக்காட்சியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்குக் கல்லூரி படிப்புக்குச் செல்ல மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறார் முதல்வர் ஸ்டாலின் எனச் செய்தியில்தான் பார்த்தேன்.

என் மகள் 12 ஆம் வகுப்பு அடுத்த ஆண்டு முடிக்க இருக்கிறாள். அவளுக்கு இந்தத் திட்டம் பயன் உள்ளதாக இருக்கும். இப்படி புதுசு புதுசாக எல்லாம் யோசித்து புதுசு புதுசாக திட்டங்களைக் கொண்டுவருகிறார் ஸ்டாலின். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
அவரது ஆட்சியில் நேரடியாக நாங்கள் பலனடைந்திருக்கிறோம். அவர் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்." என்கிறார்.
'தாட்கோ' மூலமாக வாழ்க்கையில் வெளிச்சம் பெற்ற நம்பிக்கை மனிதர் லக்ஷ்மன். நாம் அடுத்துப் பேசிய நபரும் அவர்தான். இன்று அரசின் உதவியால் கடன்பெற்று ஆட்டோவுக்கு முதலாளியாக ஜம் என்று வலம்வருகிறார் லக்ஷ்மன். அவர் என்ன சொல்கிறார்? கேட்டோம்.
"எனக்குப் பூர்வீகம் தென்காசி மாவட்டம். ஆனால் படித்து முடிந்த பிறகு 1998இல் சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கு வந்து ஒரு நிறுவனத்தில் தட்டச்சர் ஆக வேலை பார்த்தேன். 2001இல் எனக்குக் கல்யாணம் ஆனது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதற்குப் பிறகு வருமானம் பற்றவில்லை. அதன்பிறகு ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்துவிட்டேன்.
2015இல் நான் ஓட்டுநர் உரிமம் எடுத்தேன். அதைக் கொண்டு 5 வருஷம் பாரிஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்தேன். அது லோடு ஆட்டோ. எனக்கு 54 வயது ஆகிவிட்டது. ஆகவே மூட்டைகளைத் தூக்கிச் சுமக்க முடியவில்லை. அந்த நேரத்தில்தான் சொந்த தொழில் செய்யலாம் என யோசித்து பயணிகள் ஆட்டோ வாங்க முடிவுசெய்தேன்.
எனது நண்பர் மூலமாக 'தாட்கோ'வில் கடன் கேட்டு 2019இல் விண்ணப்பித்தேன். அந்தக் காலகட்டத்தில் கொரோனா வந்தது. ஊரடங்கு போட்டார்கள். கடன் கிடைப்பது தள்ளிப் போனது.
அதன்பிறகு 2021இல் முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை மனு எழுதி அனுப்பினேன். அவர் அதைப் பார்த்துவிட்டு, அதிகாரிகளுக்கு அனுப்பினார். உடனே எங்களுக்குக் கடன் உதவிக் கிடைத்தது.
இப்போது நான் ஆட்டோ முதலாளி. தொழிலாளியான நான் இன்று முதலாளி ஆகி இருக்கிறேன். அதற்கு முழுக் காரணம் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு என் பெரிய பெரிய நன்றி" என்கிறார்
"எங்களுக்குக் கல்யாணமாகி 23 வருடக்கள் ஆகிவிட்டன. அவர் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் குறைந்த சம்பளம். ரொம்ப கஷ்டப்பட்டோம். அதைவிட்டு விட்டு ஆட்டோ ஓட்ட வந்தார். அதன்பிறகுதான் குடும்ப நிலை சரியானது. இந்த 2 வருடங்களாகத்தான் நாங்கள் நலமாக இருக்கிறோம்" என்கிறார் லக்ஷ்மன் மனைவி காந்திமதி.
இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள். இருவரும் சென்னை அசோக் நகரில் தான் படிக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளின் படிப்புக்குக்கூட அதிகமாகப் பணம் செலவழிக்கவில்லை இந்தத் தம்பதி. அதற்கும் அரசே உதவி இருக்கிறது என்கின்றனர்.
"என் குழந்தைகளின் புத்தகத்திலிருந்து, செருப்பிலிருந்து, ட்ரெஸ்ல இருந்து அனைத்து செலவையும் இந்தத் தமிழக அரசுதான் செய்து வருகிறது. அதற்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" என்கிறார் காந்திமதி












Click it and Unblock the Notifications