சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டை தண்டிப்பது போல வரிப் பகிர்வு: நிதி ஆணைய குழுவிடம் முறையிட்ட ஸ்டாலின்
சென்னை : மத்திய நிதி ஆணையக் குழுவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது, வரிப்பகிர்வை முறையாக வழங்காததால் மாநிலங்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 16வது நிதி ஆணையக் குழுவை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. நிதி ஆணையக் குழுவின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "பல முக்கியமான திட்டங்களை தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம்தான் உள்ளது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில வரி வருவாய் பங்கை 41 சதவீதமாக உயர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அறிவிப்புக்கு மாறாக 33.16 விழுக்காடு மட்டுமே பகிர்ந்து அளித்துள்ளது ஒன்றிய அரசு. வரி பகிர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது. தற்போதைய வரிப் பகிர்வு முறை தமிழகத்தை தண்டிப்பதுபோல் உள்ளது. ஒன்றிய வருவாயில் மாநிலத்துக்கு வரி பகிர்வு 50%-ஆக அதிகரிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு 50 சதவீதத்தை நிதி ஆணையக்குழு உறுதி செய்திடும் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கும். கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் மாநில கட்டமைப்பு வசதிகள் பெருமளவு சேதமடைகின்றன.
பேரிடர் துயர் துடைப்பு பணிக்காக உரிய நிதியை வழங்க நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டும். சமூக நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும். நாட்டிலேயே அதிகமாக வயதானவர்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிதிக்குழு தீர்வு காணும் என்று நம்புகிறன்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.16-வது நிதிக்குழு பரிந்துரைகள் அனைத்து மாநில தேவை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் என நம்புகிறேன்.நிதிக்குழு பரிந்துரைகள் இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசு நாடாக மாற்றும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications