கிண்டிக்கு வண்டியை விட்ட முதல்வர் ஸ்டாலின்.. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!
சென்னை : சென்னை கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தன.

இதைத்தொடர்ந்து பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஜூன் 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் திறந்து வைக்க கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவரின் வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் திறப்புவிழா தேதி மாற்றம் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாடு பயணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், வரும் ஜூன் 15ஆம் தேதி கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா சென்னை கிண்டியில் நடைபெறவுள்ளது. இந்த திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 ச.மீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications