சார்.. இன்னும் பேர் வைக்கல.. மேயர் வசந்த குமாரி சொன்னதும்.. ஸ்டாலின் சூட்டிய பெயர்.. என்ன தெரியுமா?
சென்னை: தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணனின் ஆண் குழந்தைக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பெயர் வைத்த சம்பவம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தாம்பரம் சென்று இருந்தார். அங்கு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-வது மாநாடு நடப்பதால், அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்டு இருந்தார்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வரலாறு மிகவும் முக்கியம். பொய், புரட்டுகளை, கற்பனைகளை சிலர் வரலாறு என்று கூறி எழுதி வருகின்றனர்.

வரலாறு
இந்த பொய்யான திரிக்கப்பட்ட வரலாறுகளை நாம் முறியடிக்க வேண்டும். இதற்காகவே நாம் வரலாறு படிக்க வேண்டும். வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது.. நமக்கு என்ன வேலையா கிடைக்க போகிறது என்று இருந்து விட கூடாது. வரலாறு படித்தால் வேலை கிடைக்காது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் வரலாற்றை படிப்பது என்பது வெறும் பட்டத்திற்காக படிப்பது அல்ல. வெறும் சம்பளத்திற்காக படிப்பது அல்ல. நம்முடைய வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது மிக முக்கியமானது.

ஏன் முக்கியம்
வரலாறு இல்லாமல் நம்முடைய எதிர்காலம் இல்லை. வரலாற்றை தெரிந்து கொண்டால்தான் நிகழ்காலத்தில் நாம் யார் என்று நமக்கு தெரியும். பொய்யான கட்டுக்கதைகளை சிலர் வரலாறு என்று பரப்புவதை நாம் தடுக்க முடியும். நம்முடைய வரலாறு அறிவியல் பூர்வமாக அணுகப்பட வேண்டும். கற்பனை கதைகளை வரலாறு துன்று நம்ப கூடாது. நம்முடைய மொழி, கலாச்சாரம், போராட்டம் இவரை தெறித்து கொள்ள வரலாறு முக்கியம். வரலாறு திரிபுதான் நம் நாட்டின் மிகப்பெரிய கேடு. நம்மை சூழ்ந்து இருக்கும் ஆபத்து அதுதான். அதை சரி செய்ய உங்களை போன்ற வரலாற்று மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள்தான் தேவை. தொடர்ந்து வரலாற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் ராஜா
இந்த நிகழ்ச்சிக்கு பின்பாக முதல்வர் ஸ்டாலின் அங்கு இருந்த திமுக நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார். தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன் தனக்கு பிறந்த கை குழந்தையுடன் வந்திருந்தார். குழந்தையை பார்த்ததும் முதல்வர் ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணனிடம் நலம் விசாரித்தார்.

உடல்நிலை
உங்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது. குழந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். இதற்கு நலமாக இருக்கிறோம் என்று கூறிய வசந்த குமாரி.. ஐயா நீங்க பேர் வைக்கணும்னுதான் இன்னும் பேர் வைக்காம இருக்கோம். நீங்களே என் மகனுக்கு பேர் வச்சிடுங்க என்று கூறினார். இதை கேட்ட முதல்வர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் குழந்தையை தூக்கி திராவிட அரசன் என்று பெயர் வைத்தார். முதல்வர் ஸ்டாலின் எப்போதும் திமுக தொடர்பான தலைவர்கள் பெயரை வைப்பது வழக்கம். இந்த முறை திராவிட அரசன் என்று பெயர் வைத்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications