மம்தா.. நிதிஷ் சொன்னதை.. அப்படியே ஸ்டாலினும் சொல்றாரே! "தகவல்" வந்துடுச்சா? தேர்தலுக்கு ரெடியாகுங்க
சென்னை: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை முதல்வர் ஸ்டாலினும் சொல்லி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் இன்று மற்றும் நாளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தேர்தலுக்கு ரெடியாகுங்க: ஐக்கிய ஜனதா தளம் தலைவர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், லோக்சபா தேர்தல் திட்டமிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கடந்த ஏழு மாதங்களாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதை சிலர் நாட்டில் எதையும் செய்யும் திறன் கொண்டவர்கள். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம்.
நாங்கள் மும்பைக்குச் செல்கிறோம், நாட்டின் அதிகபட்ச எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை என்னிடம் உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பதவியிலும் விருப்பமில்லை. லோக்சபா தேர்தல் இந்த வருடம் முன்கூட்டியே நடக்கலாம். அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன, என்று கூறினார்.
இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பாஜக ஏற்கனவே அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துள்ளது, இதனால் வேறு எந்த அரசியல் கட்சியும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு "எதேச்சதிகார ஆட்சியை" எதிர்கொள்ளும்.
அவர்கள் (பாஜக) லோக்சபா தேர்தலை 2023 டிசம்பரில் அல்லது ஜனவரியில் நடத்தலாம் என்று நான் பயப்படுகிறேன். அதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடு எதேச்சதிகார ஆட்சியை சந்திக்கும், என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் ரிப்பீட்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் குறிப்பிட்ட இதே விஷயத்தை முதல்வர் ஸ்டாலினும் சொல்லி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணி கட்சிகள் எண்ணிக்கை இன்னும் உயரும். கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல் குவித்த பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதன்படி இந்த வருடமே.. இறுதியில் தேர்தலை நடத்த அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் அதாவது மே மாதம் தேர்தலை நடத்த மோடி திட்டமிட்டு வருகிறாராம்.
இந்திய கூட்டணி வலிமை அடையும் முன். இந்தியா கூட்டணி முறையாக திட்டங்களை வகுக்கும் முன் தேர்தலை நடத்தலாம் என்ற திட்டத்தில் மோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications