அதிர வைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்.. போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது எனத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், வழக்கை விரைவாக நடத்தி, கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் போல சீருடையில் வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.
இந்த சம்பவத்தை அடுத்து தலைநகர் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் சரணடைந்தனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வேதனை தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலைகள் மலினமாகி இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications