ஜெய்பீம் திரைப்படம் நேற்று பார்த்தேன்... இரவு முழுவதும் மனம் கனத்தது -முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த பிறகு இரவு முழுவதும் மனம் கனத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இருளர் இன மக்களின் வாழ்வியலையும், துன்ப துயரங்களையும் இதைவிட தெளிவாக காட்சிப்படுத்த முடியாது என ஜெய்பீம் படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அசுரன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தமிழ் திரைப்படம் ஒன்றை மனதார பாராட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

ஜெய்பீம் படக்குழுவினருக்கு வணக்கம் என தொடங்கும் கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது;
''நேற்றைய தினம் ஜெய்பீம் திரைப்படம் பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதை கனமாக ஆக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர் இன மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாக காட்சிப்படுத்த இயலாது என்பதை காட்டிவிட்டீர்கள். ''
''நடந்த ஒரு நிகழ்வை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிக மிக கனமானதாக இருக்கிறது. நேர்மையும், மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதை காட்டியுள்ளீர்கள்.''
''சட்டத்தையும், நீதியையும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதை எடுத்துச்சொல்கிறது இந்தப்படம். ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பதை விட ஒரு வழக்கறிஞராகவே நண்பர் சூர்யா வாழ்ந்துள்ளார். இக்கதையை தேர்வு செய்ததற்காகவும், அதை தயாரித்ததற்காகவும், அதில் தாமே நடித்ததற்காகவும் மூன்று பாராட்டுகளை பெறுகிறார் சூர்யா.''
''கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் ஞனவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற படங்கள் ஏராளமாக வர வேண்டும் என்பதே எனது ஆசையும், விருப்பமும் ஆகும்.''
இருளர் இனம் குறித்து படம் எடுத்ததுடன் தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல் பழங்குடியினர் பாதுகாப்பு சங்க மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினர் நண்பர் சூர்யா வழங்கியது என்னை நெகிழச்செய்தது. இது இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும். இது போன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.'' இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் திரைப்படம் குறித்தும் நடிகர் சூர்யா பற்றியும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதனிடையே அசுரன் திரைப்படம் குறித்து இவர் பாராட்டு தெரிவித்த போது, அது முரசொலி நில விவகாரம் தொடர்பாக சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரைப்படம் ஒன்றை திரைவிமர்சனம் வடிவில் வர்ணித்து முதல்வர் பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications