உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு.. வணிகர்களுக்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் தந்த 6 மேஜர் அறிவிப்புகள்
சென்னை: சென்னையில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதோடு, வணிகர்களுக்கான உதவித்தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்பட 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை மதுராந்தகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வணிகர்களுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வணிகர்களாக இருக்க கூடிய நீங்கள் தான் மக்களின் உணர்வுகளையும், உள்ளத்தையும் புரிந்தவர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு உறுதுணையாக திராவிட மாடல் அரசு இருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கலைஞர் காலமாக இருந்தாலும் சரி, என்னுடைய காலமாக இருந்தாலும் சரி, எனக்கு பிறகு வரக்கூடிய திராவிட இயக்கத்தை காப்பாற்றக்கூடிய யாராக இருந்தாலும் நிச்சயமாக வணிகர்களின் நலனை காக்கும் அரசாகவும், இயக்கமாகவும் தான் இருக்கும்.
அதேபோல் நீங்களும் தொடர்ந்து இந்த இயக்கத்துக்கு ஆதரவை தந்து கொண்டு இருக்கிறீர்கள். என்னுடைய சில கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். அதனடிப்படையில் சில அறிவிப்புகளை இந்த மாநாட்டின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன். இதில் முதல் அறிவிப்பாக வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருக்க கூடியவர்களுக்கான வழங்கப்பட்டு வந்த உதவித்தொகயை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி இருந்தோம். வருங்காலத்தில் இது ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கு கால நிர்ணயம் கொடுத்து உள்ளீர்கள். அதனை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதுவும் மேலும் 6 மாதம் காலத்துக்கு நீட்டிக்கப்படும். 3வது அறிவிப்பு என்பது உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும்.
4வது அறிவிப்பாக சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5வது அறிவிப்பாக வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம். 6வது அறிவிப்பாக அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்படும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications