டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! “தமிழக அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்தது..” - முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இதனையடுத்து தற்போது ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
தனது x தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது” என்று கூறியுள்ளார்.
அரிட்டாப்பட்டியில் நடந்த தொடர் போராட்டங்களை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சுரங்க ஏலத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை கடந்த டிச.9ம் தேதி கொண்டுவந்திருந்தது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நான் முதல்வராக இருக்கும் வரை சுரங்க திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். அதாவது,
“டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு நிச்சயமாக இந்த அரசு அனுமதியை கொடுக்காது. திமுக ஆட்சி எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டியது இல்லை. எந்த காரணத்தை கொண்டும் நான் முதல்வராக இருக்கும் வரை, இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டேன். மீறி இந்த திட்டம் வந்தால் மதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன். திட்டத்தை தடுத்தே தீர்வோம்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications