வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி.. ஓட்டு கேட்க மட்டும் வருகிறார்.. ஸ்டாலின் தாக்கு!
சென்னை: வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வரலாமா எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்க பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்வில் வளர்ச்சித் திட்ட பணிக்கான இலட்சினையை வெளியிட்ட பின் முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், "சென்னையை மிகச்சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன்.

சென்னையை இந்தியாவின் தலைசிறந்த நவீன நகரமாக மாற்ற வேண்டும் என்பது வேண்டுகோள் அல்ல, கட்டளை. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்படும். வளர்ச்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசு வடசென்னையை மிக முக்கியமாக பார்க்கிறது. என்னை எம்எல்ஏவாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியது வடசென்னை தான். சென்னையின் அனைத்து வளர்ச்சி பணிகளும் திமுக உருவாக்கியதுதான்" என்றார்.
தொடர்ந்து, மத்திய பாஜக அரசை விமர்சித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது வராத பிரதமர் மோடி, வாக்கு கேட்க மட்டும் குமரி வருகிறார். குஜராத்துக்கு மட்டுமே உடனே நிதி தரும் பிரதமர் மோடி, 3 மாதங்கள் ஆகியும் தமிழ்நாட்டுக்கு இன்னும் நிதி வழங்கவில்லை. மத்திய அரசுக்கு அதிக வரியை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. ஆனால், நிதி கேட்டால் பிரிவினைவாதி என கூறுகிறார்கள்.
கொடுக்கும் வரிக்கேற்ப தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி நிதியை கொடுக்கிறார்களா? ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் திருப்பித் தருகிறார்கள். எனவே, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் பிரிவினை பேசவில்லை, ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். தேசபக்தி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை.
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை. சென்னைக்காக மத்திய அரசு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. சென்னை வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வரலாமா?"
எனக் காட்டமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications