கண்டுக்காதீங்க.. இதுதான் "இப்போ" முக்கியம்.. சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.. பறக்கும் அசைன்மென்ட்!
சென்னை: திமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியமான சில அசைன்மெண்டுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாக அறிவாலய தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் சமீபத்தில் உட்கட்சி தேர்தல் முடிந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிர்வாகிகள் நியமனம் முடிந்த நிலையில் தற்போது பல்வேறு பொறுப்புகளுக்கு செயலாளர்கள் தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
திமுக மகளிரணிச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். திமுக மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவரணி செயலாளராக சிவிஎம்பி. எழிலரசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இப்படி பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.
திமுகவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு முக்கியப் பதவி! மாஜி அமைச்சர் அப்செட்! பின்னணி என்ன?
திமுக கூட்டம்
இந்த நிலையில்தான் டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில உத்தரவுகளை கட்சி தலைவராக மாவட்ட சொல்லற்களர்களுக்கு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முக்கியமான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
பாஜக செயல்பாடு
பாஜக என்றாலே பூத் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வலிமைதான். பூத் கமிட்டியை அமைத்து அதன் மூலம் ஆட்களை பிடிப்பதுதான் பாஜகவின் தேர்தல் வியூகம். பல மாநிலங்களில் பாஜகவிற்கு இது சாதகமான முடிவை கொடுத்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பூத் வாரியாக இன்னும் வலிமை அடையவில்லை. .இதையடுத்தே டெல்லி தரப்பில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு பூத் தொடர்பாக முக்கியமான ஆலோசனை ஒன்று வழங்கப்பட்டு உள்ளதாம். அதன்படி இப்போதே ஏரியா வாரியாக பூத் கமிட்டியை அமையுங்கள். உடனே பூத் கமிட்டியை உருவாக்கும் வேலையை பாருங்கள் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக பாஜக பணிகளில் இறங்கி உள்ளது. அடுத்த 60 நாட்கள் இதற்காக பாஜக பணிகளை செய்ய உள்ளது.
திமுக இப்படி இல்லை
ஆனால் திமுக இப்படி எல்லாம் இல்லை. பல வருடங்களாக மிக வலிமையான பூத் குழுக்களை வைத்து உள்ளது. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த கமிட்டியை வலிமைப்படுத்த வேண்டும். பூத் வாரியாக பல புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட இருக்கிறாராம். 2024 தேர்தலுக்கு தயாராகும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த முக்கியமான அசைன்மென்டை கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக பெரிய கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
மிகப்பெரிய கூட்டம்
ஜனவரி மாதம் மிகப்பெரிய கூட்டங்களை திருச்சி மற்றும் கோவையில் நடத்த எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்து இருக்கிறார். பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களாக இது இருக்கும் என்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாவட்ட வாரியாக பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை திமுக மாவட்ட செயலாளர்கள் நடத்த வேண்டும். முன்பே தேதி சொல்லிவிட்டு ஏற்பாடுகளை செய்யுங்கள். முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்து கொள்வார். ஒன்றரை வருட ஆட்சியின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அன்பழகன் நூற்றாண்டு விழா சார்பாக இந்த கூட்டங்களை நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட இருக்கிறாராம். ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் - அமைச்சர்கள் இடையே இருக்கும் மோதல் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி புகார்
இது போக திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு எதிராக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் வைத்தார். பல்வேறு திமுக நிர்வாகிகளை பாஜக, அதிமுக தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், எடப்பாடி பழனிசாமி பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். கட்சி பணிகளை செய்யுங்கள். அவரை கண்டுகொள்ளாதீர்கள். 2024 லோக்சபா தேர்தல்தான் முக்கியம். அதில் கவனம் செலுத்துங்கள். அதிமுகவை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது போக ஒரு சில மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளுக்கு மட்டும் சிறப்பு அசைன்மென்ட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.