வெளிநாடுகளுக்கு பறக்க ரெடியாகும் முதல்வர் ஸ்டாலின்.. இங்கிலாந்து, ஜெர்மனிக்கு விசிட்.. என்ன பிளான்?
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இந்தப் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணம் 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்த்து வருகிறார்.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பல நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளன.
வெளிநாட்டு பயணம்
2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க
இதையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5ஆவது முறையாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த முறை இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இங்கிலாந்து, ஜெர்மனி பயணம்
இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுபார் என்றும், அங்கிருக்கும் தமிழ் வம்சாவளியினரை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி இரு நாடுகளிலும் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications