மழை நீர் ஒரு இடத்துல கூட தேங்கக் கூடாது.. வந்த இடம் தெரியாமல் வடிந்துவிட வேண்டும்.. முதல்வர் அறிவுரை
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார். பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது.
இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனையை தொடங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முடிக்க வேண்டும். 2 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகளால் மழையால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. பருவமழை காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மழை நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சாலைகள் சரியில்லாததால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மழை நீர் வடிகால்களை தூர்வார வேண்டும். மழை நீர் வடிகால் பணிகளை நான் விரைவில் ஆய்வு செய்யவுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப் பணி - நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.











Click it and Unblock the Notifications