6 தமிழக மீனவர்கள் உட்பட 16 மீனவர்கள் கைது.. நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 16 மீனவர்களைப் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் டியாகோ கார்சியா அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து விடுகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களையும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதற்கிடையே கடந்த பிப். 23இல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களையும். அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்கும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

16 மீனவர்கள்
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள். கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) 09.02.2023 அன்று பதிவு எண்.IND-TN-15-MM-3793-ல் "புனித மேரி" என்ற பெயர் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், அம்மீனவர்கள் 23.02.2023 அன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்,

டியாகோ கார்சியா அதிகாரிகள்
அப்போது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர் என்பதையும் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இப்பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில் இக்கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்துமென்று தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சகம்
எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம் தூதரக வழிமுறைகள் மூலமாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவத்தினை எடுத்துச் சென்று கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது கடிதத்தில் இந்தியப் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications