கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை : கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ 50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த பயிர்க்கடன் அறிவிப்பு யாருக்கு பொருந்தும், எவ்வளவு கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்ற விவரங்களையும் பார்க்கலாம்.
கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1 ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். குறு விவசாயிகளுக்கு ரூ 50 ஆயிரம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ 50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக வேளாண் துறை அமை்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும் தமிழக அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 1.5.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

கடன் தொகை 50 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
50,001 - 60000 வரை கடன் வாங்கிய குறு விவசாயிகளுக்கு 40 ஆயிரமும், சிறு விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்.
அது போல் 60,001- 70000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும் சிறு விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்.
70,001 - 80 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 20 ஆயிரமும், சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும்.

80,001 - 90 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரமும், சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ 1 லட்சம் மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கும் சிறு விவசாயிகளுக்கும் ரூ 5 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ 5000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ 2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications