"அம்மாவாகாமல் இருப்பதுதான் என்னுள் இருக்கும் தாய்மை!" நடிகை பார்வதியின் ஒரு பதில்... வெடித்த சர்ச்சை!
சென்னை: சினிமா பிரபலங்கள் கொடுக்கும் சில பதில்கள் பேட்டி முடிந்த பிறகுதான் உண்மையான விவாதத்தை ஆரம்பிக்கும். அப்படித்தான் நடிகை பார்வதி சொன்ன ஒரு வரியும் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பார்வதி பேசும் போது, "அம்மாவாகாமல் இருப்பதுதான் என்னுள் இருக்கும் தாய்மை" என்று பேசி இருக்கிறார். இந்த ஒரு வரியை கேட்ட சிலர், "இது என்ன கருத்து?" என்று விமர்சிக்க ஆரம்பித்தனர். இன்னொரு தரப்பு, "அவர் சொன்னதை முழுமையாக கேளுங்கள். அப்போதுதான் அதன் அர்த்தம் புரியும்" என்று அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
தாய்மை பற்றி பார்வதி விளக்கம்
தற்போது பிரித்விராஜுடன் பார்வதி இணைந்து நடித்துள்ள 'I, Nobody' திரைப்படம் ஜூலை 9-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில்தான் பார்வதி தன்னுடைய திருமணம், குழந்தை, தாய்மை, வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பார்வதி பேசும்போது, "எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. குழந்தையும் இல்லை. ஒரு குழந்தையை பெற்றெடுப்பது பெரிய விஷயம். அதைவிட பெரிய விஷயம் அதை சரியாக வளர்ப்பது. அந்தப் பொறுப்பை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால்தான் அம்மாவாகாமல் இருப்பதுதான் என்னுடைய தாய்மை என்று சொல்கிறேன்" என்றார்.
அதோடு நிற்காமல் இன்னும் வெளிப்படையாக, "என்னால் என்ன செய்ய முடியும்... என்னால் என்ன செய்ய முடியாது... என்பதை நான் நன்றாக அறிவேன். மற்றவர்களுடன் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் நான் எடுத்திருக்கும் இந்த முடிவு எனக்கு சரியான முடிவாகத்தான் தோன்றுகிறது" என்றும் கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் கருத்து
பார்வதி சொன்ன கருத்தின் மையம் வேறு. ஒரு குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவது மட்டும் பெற்றோரின் பொறுப்பு இல்லை. அந்தக் குழந்தையை அன்பாக வளர்க்க வேண்டும். அதற்கான நேரம் இருக்க வேண்டும். பொருளாதார பாதுகாப்பு இருக்க வேண்டும். மனதளவில் தயாராக இருக்க வேண்டும். இவை எதுவும் இல்லாமல் வெறும் சமூக அழுத்தத்திற்காக குழந்தை பெற்றுக் கொள்வதில் அர்த்தமில்லை என்பதுதான் அவர் சொல்ல வந்த விஷயம்.
"அந்த பொறுப்பை முழுமையாக ஏற்க முடியாது என்று தெரிந்தால், அம்மாவாகாமல் இருப்பதுதான் அந்தக் குழந்தைக்கே செய்யும் மிகப்பெரிய அன்பு" என்ற பொருளில்தான் அவர் பேசியதாக அவரது ரசிகர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
சர்ச்சை ஏன் வெடித்தது?
இந்தியாவில் திருமணம், குழந்தை, குடும்பம் போன்ற விஷயங்கள் இன்னும் உணர்ச்சிபூர்வமான தலைப்புகள். அதனால் "அம்மாவாகாமல் இருப்பதுதான் தாய்மை" என்று அவர் பேசிய கிளிப்புகளை வெட்டி பகிர்ந்ததும், சமூக வலைதளங்களில் கடுமையான விவாதம் ஆரம்பித்துவிட்டது.
சிலர், "இது குடும்ப வாழ்க்கையை எதிர்க்கும் கருத்து" என்று விமர்சிக்கிறார்கள். மற்றொரு தரப்பு, "குழந்தை பெற்ற பிறகு கவனிக்காமல் விடுவதைவிட, அந்த பொறுப்பை ஏற்க முடியாது என்று நேராகச் சொல்வது தவறா?" என்று கேள்வி எழுப்பி வருகிறது.
இன்றைய சமூக நிலை
கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற விவாதங்கள் அதிகரித்துள்ளன. திருமணம் செய்துகொண்ட பிறகு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்யும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.
வேலை, வாழ்க்கை, உடல்நலம், மனநிலை, பொருளாதாரம் என பல காரணங்களால் சிலர் பெற்றோராக விரும்பவில்லை என்று வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில், குழந்தை பெற்றுவிட்டு பராமரிக்க முடியாமல் தவிக்கும் குடும்பங்களும், கைவிடப்படும் குழந்தைகள் பற்றிய செய்திகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில்தான் பார்வதியின் கருத்தையும் சிலர் பார்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
பார்வதி யார்?
மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஸ்ட்ராங்கான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருபவர் பார்வதி. தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூர் டேஸ், டேக் ஆஃப் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் தனி இடத்தைப் பிடித்தவர்.
திரையில் மட்டுமல்ல, பெண்களின் உரிமை, வேலையில் சமத்துவம், மனநலம், சினிமாவில் பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் போன்ற பல சமூக விஷயங்களிலும் தனது கருத்தை வெளிப்படையாகச் சொல்லும் நடிகையாகவும் அவர் பிரபலமானவர்தான். அதனால்தான் அவரது ஒவ்வொரு பேட்டியும் சமூக வலைதளங்களில் தனியாக பேசப்படுகிறது.














Click it and Unblock the Notifications