காட்டுமன்னார்கோவிலில் காரில் தவித்த பாமக சௌமியா அன்புமணி.. விருந்தினர் மாளிகையில் நடந்தது என்ன?
கடலூர்: பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி தொடர்பான ஒரு செய்தி இப்போது ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது... அரசு நிர்வாக நடைமுறைகள் சார்ந்த இந்தத் திடீர் விவகாரம், கடலூர் மாவட்டப் பகுதியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
தமிழகத்தில் ஏற்கனவே கரண்ட் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.. குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களின் கைக்குழந்தைகளுடன் வீதிக்கு வந்து விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.,

தமிழகத்தில் மின்சார தடை
மக்களின் இப்படியொரு அவதியையும், தவிப்பையும் கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மின்துறையின் நிர்வாகச் சீர்கேடே இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி, ஆளும் அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தமிழகத்தில் ஆங்காங்கே இப்படி மின்தடைப் பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணிக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
காட்டுமன்னார்கோவில் சௌமியா
காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி கலந்துகொண்டார். இதன் ஒருபகுதியாக குருங்குடியில் நடந்த கபடி போட்டியையும் அவர் தொடங்கி வைத்தார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, நேற்றிரவு சிறிதுநேரம் ஓய்வெடுப்பதற்காக லால்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு சௌமியா அன்புமணி சென்றார். ஆனால், அவர் போன கொஞ்ச நேரத்துலேயே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் ஓய்வெடுக்க முடியாமல், வேறு வழியின்றி சிறிதுநேரம் தனது காரிலேயே அவர் உட்கார்ந்திருந்தார். அதன் பிறகு, காரை விட்டு இறங்கி டார்ச் லைட் வெளிச்சத்திலேயே விருந்தினர் மாளிகையில் உள்ள தனது ரூமுக்கு சென்ற அவர், உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
காரில் சௌமியா அன்புமணி
இந்தச் சம்பவம் பாமகவினர் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர் மாளிகையில் ஜெனரேட்டர் வசதி இருந்தும், மின்தடை ஏற்பட்ட போது அதற்கு ஏன் மின்விநியோகம் கொடுக்கப்படவில்லை என்று அக்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள்..
அதுமட்டுமில்லாமல், இதுகுறித்து மின்துறை அதிகாரிகளிடம் பேசுவதற்காகப் பாமகவினர் செல்போனில் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது, அதிகாரிகள் யாரும் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்தச் செயல் பாமகவினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் போனை எடுக்காததால், இது ஏதோ தற்செயலாக நடந்த இயல்பான மின்தடை கிடையாது, திட்டமிட்டு செய்யப்பட்ட மின்சார துண்டிப்பு தான் என்று பாமகவினர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மின்துறையின் உயர் அதிகாரிகளிடம் பாமகவினர் புகாரும் அளித்துள்ளனர். அரசு மாளிகையிலேயே எம்எல்ஏவுக்கு நேர்ந்த இந்த மின்தடை சம்பவம் அப்பகுதியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications