டோன்ட் வொரி.. விபத்து நடந்த இடமெல்லாம் விஜயபாஸ்கர் இருப்பார்!
சென்னை: நேற்று சாலை விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். தற்போது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று பலரை முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இந்த நிலையில் விஜயபாஸ்கர் போகும் இடமெல்லாம் விபத்து நடக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றார். அதே நேரத்தில் அவர் மருத்துவர் என்பதால் முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவர் சி விஜயபாஸ்கர். எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்தில் வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கிறார்.

2011 முதல் 2021 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் சி விஜயபாஸ்கரரும் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 2011, 2016, 2021, 2026 என நான்கு சட்டசபை தேர்தல்களில் வென்றவர். அதற்கு முன்பு 2001 இல் புதுக்கோட்டை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடிப்படையில் சி விஜயபாஸ்கர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இவரது தொடர் வெற்றிக்கு காரணமாக அனைவரது வீட்டுக்கும் சென்று பழகுபவர், அனைத்து விசேஷங்களிலும் கலந்து கொள்பவர் என்ற பெயர் விஜயபாஸ்கருக்கு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார். வரும் தேர்தலில் அவர் வரும் இடைத்தேர்தலில் அவர் மீண்டும் விராலிமலை தொகுதியிலேயே போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் நேற்று விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இந்த வீடியோவை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதேபோல கடந்த ஜனவரி மாதம் விராலிமலை தனியார் தொழிற்சாலை பணியாளர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 15 பேருக்கு காயம் அடைந்தனர். மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்ட போது காயமடைந்த தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற விஜயபாஸ்கர் அங்கு முதலுதவிக்கு காத்திருந்த நோயாளிகளுக்கு முதலுதவி செய்தார். அப்போது அவரது வீடியோவை அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2023 ஜூலை எட்டாம் தேதி புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் தந்தை இன்னோவா காரும் டாட்டா ஏஸ் வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர்களை அருகில் இருந்தோர் மீட்பதற்காக ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி இருந்தனர். ஆனால் அந்த வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விபத்தை பார்த்தவுடன் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி தனது காரிலேயே மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார். திமுக பிரமுகரின் தந்தை என்றாலும் கட்சி பாகுபாடு பார்க்காமல் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் விஜயபாஸ்கர் என அப்போதும் அவரது வீடியோ பகிரப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த சம்பவங்களை வைத்து விபத்து நடக்கும் இடங்களிலும் எல்லாம் எப்படி விஜயபாஸ்கர் இருக்கிறார் என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள். அதே நேரத்தில் மருத்துவர் என்பதால் தான் செல்லும் வழியில் விபத்து நேரிட்டதை பார்த்து விஜயபாஸ்கர் உதவுகிறார். இதில் கேலி கிண்டலுக்கு எந்தவித இடமும் இல்லை என சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.














Click it and Unblock the Notifications