டாஸ்மாக்கை கையில் எடுத்த சவுமியா! பேச பேச பென்சிலால் நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்! சபாஷ்!
சென்னை: ஒரு டாஸ்மாக் கடை மூடினால் பின்னாடியே ஒரு சந்தில் 4 டாஸ்மாக் கடைகள் தொடங்குவதாக சவுமியா அன்புமணி புகார் கூறியதை முதல்வர் விஜய் தனது கைகளாலேயே பென்சிலில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். இது புதிய நடைமுறையாக அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய அந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு உறுப்பினர்களாக பேசி, விஜய்யின் ஆட்சிக்கு ஏன் ஆதரவு, ஏன் எதிர்ப்பு என்பதை தெரிவித்தனர்.

அந்த வகையில் சவுமியா அன்புமணி பேசுகையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேச வாய்ப்பளித்தமைக்காக சபாநாயகருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்பதுதான் பாமகவின் கொள்கையாகும். இந்த கொள்கைகளை எட்டுவதற்காகத்தான் பாமக தொடர்ந்து பாடுபடுகிறது. போதை இல்லாத தமிழ்நாடு, சமூகநீதி மற்றும் வளர்ச்சியில் புதியதோர் தமிழகம் படைப்போம் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
பாமகவின் கொள்கைகளும் நோக்கங்களும் எப்போதும் தமிழகத்தின் நலனை முன்னிறுத்துபவையாகும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சமூக நீதி கணக்கெடு எனப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும். முழு மதுவிலக்கு மற்றும் போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். நீர் மேலாண்மை முக்கியவம் அளித்து பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
அனைத்து வேளாண் விலை பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்தல் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்தல், உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், தரமான திறன் சார்ந்த கல்வி இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
இளைஞர்களுக்கு அரசு, தனியார் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்தை தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்றுதல், அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்தல்! சுற்றுச்சூழலை பாதுகாத்தல், சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துதல், மணல் , கிரானைட், கருங்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்தல், தமிழ்மொழி வளர்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்தல் ஆகியவைதான் பாமகவின் நோக்கங்கள் ஆகும்.
தவெக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகள் பாமகவின் கொள்கைகளுடன் ஒத்து போகிற வகையில்தான் வழங்கினார். அதில் குறிப்பாக அனைவருக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை, மது வணிகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை , வேளாண் விளைப்பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, அரசு, தனியார் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், போன்றவையாகும்.
அது போல் வழிபாட்டுதலங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரி அருகே உள்ள மதுக்கடைகளை 2 வாரங்களுக்குள் மூட முதல்வர் ஆணையிட்டிருக்கிறார். இதை பாமக வரவேற்கிறது.
எனது பேர குழந்தைகள் வளர்ந்து வரும் போது போதையில்லாத தமிழகம் உருவாகியிருக்க வேண்டும். தமிழகமே மதுவால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு டாஸ்மாக் கடையை மூடினால் ஒரு சந்தில் 4 டாஸ்மாக் கடைகள் முளைப்படுவதை தடுக்க இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சவுமியா பேச பேச, முதல்வர் விஜய் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications