'வரலாறு' முக்கியம்.. காஞ்சிபுரம் பாரம்பரியத்திற்கு பாதிப்பு வராது.. சிஎம்டிஏவிற்கு மக்கள் பாராட்டு
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக எல்லையை விரிவுபடுத்த கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை புதுப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை சிஎம்டிஏ தொடங்கியுள்ளது.
சென்னைக்கு வந்தால் எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்கிற கனவோடு இந்நகரில் தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே இதற்கேற்ப சென்னை மாநகராட்சியின் பரப்பளவை அதிகரிக்க கடந்த 2018ம் ஆண்டு திட்டமிடப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனையின் முடிவில் விரிவாக்கத்திற்கு முதலமைச்சர் அனுமதியளித்திருந்தார். இதன்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக எல்லையானது 1,189 சதுர கிமீ அளவில் இருந்து 5,904 சதுர கி.மீட்டர் அளவில் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
புதியதாக விரிவாக்கப்பட இருக்கும் 5,904 சதுர கி.மீ பரப்பளவில், 4 நகரங்கள், 12 நகராட்சிகள், 13 பேரூராட்சிகள், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் 1,125 கிராமங்கள் உள்ளடங்கும். அதாவது இவை அனைத்தும் சென்னை பெருநகர் பகுதிகளில் இணைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் துணை நகரத்தை பொறுத்த அளவில் 62.78 சதுர கி.மீட்டரில் இருந்து, நல்லூர், வயவூர் உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கி புதியதாக உருவாகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில், இந்த விரிவாக்க பணியில் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரிய தொழில்கள் ஆகியவற்றிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. எனவே இந்த இடங்களை அடையாளம் காணவும், அவற்றை பாதுகாக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பரிந்துரைக்க கலந்தாலோசகரை நியமிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. தற்போது கலந்தாலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
இதில் முதல்கட்டமாக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சிஎம்டிஏவின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications