டெல்டா விவசாயிகளை கலங்கடித்த கனமழை.. முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போகும் ‘ரிப்போர்ட்'! அடுத்து?
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் உள்ளிட்ட விவரங்களை நாளை அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது அமைச்சர்கள் குழு.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, நெய்வாசல் தென்பாதி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, மஞ்சலாறு, கீழணை, மதுக்கூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டியது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கனமழை கொட்டி வருகிறது. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம், திருமுல்லைவாசல் உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் அப்பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.
வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு ஒரு வார காலம் ஆகும் என்பதால் மூழ்கி உள்ள பயிர்கள் அனைத்தும் அழுகி போகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக அரசும், மாவட்ட நிர்வாகமும் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேளாண்மை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை ஆய்வு செய்து கணக்கிட அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர்கள் குழு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் முதல்நிலை ஆய்வினை மேற்கொண்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், சேகரிக்கப்பட்ட விவரங்கள் நாளை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கையைத் தொடர்ந்து, சேதம் மதிப்பிடப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், உடனடி நிவாரணம் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பயிர்கள் சேதமடைந்துள்ளதால் கவலையில் வாடும் விவசாயிகளை அரசின் நிவாரணம் ஆறுதல் படுத்தும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications