தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவமதிப்பு.. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்
சென்னை: சென்னையில் குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காமல் அவமதித்ததாக ஆர்பிஐ வங்கி அதிகாரிகள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்எம்என் சாமி தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

இருக்கையில் அமர்ந்த அதிகாரிகள்
அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர். இதை பார்த்து ஆவேசம் அடைந்த நிருபர் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது ஏன் எழுந்து நிற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது என்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணை
தமிழகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பித்துள்ளது. ஊனமுற்றவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது. இதை அதிகாரிகள், இனி மேல் கடைப்பிடிக்கிறோம் என கூறினர்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. தமிழகத்தில் தமிழக அரசு பிறப்பித்த ஆணையை அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவத்தில் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழக பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக ஆர்பிஐ அதிகாரிகள் மீது சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ வங்கி அதிகாரிகள் மீது புகார்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை மாநகர காவல் துறையில் ஆன்லைன மூலம் இந்த புகாரை அளித்துள்ளார். இந்த புகார் பூக்கடை காவல் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காததால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீடியோ, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications