ஒட்டுக் கேட்கும் உளவுத்துறை..முதல்வர் டேபிளுக்கே ரிப்போர்ட்! 40 கோடியாமே? பகீர் கிளப்பும் அதிமுக..!
சென்னை: சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட சாஃப்ட்வேர் மூலமாக எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் தமிழ்நாடு அரசின் உளவுத்துறையால் ஒட்டு கேட்கப்படுவதாகவும் இது சட்ட விரோதம் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பெகாசஸ் என்ற உளவு சாப்ட்வேர் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரினை முன் வைத்தன.

இந்த விவகாரம் அப்போது பெரிய அளவில் பரபரப்பை கிளப்பியது. அதற்கு பிறகாக இந்த விவகாரம் சற்றே ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இது போன்ற புகார்கள் எழுவதாகவும், தங்கள் பயனர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க முயற்சிப்பதாக ஐபோன் நிறுவனம் எச்சரித்து இருந்தது.
ஒட்டுகேட்பு புகார்: இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு பாஜக இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது வழக்கம் தான் எனவும் விமர்சித்திருந்தது. இந்த நிலையில் திமுக மீது இதே புகாரை கொடுத்திருக்கிறது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக. இது தொடர்பாக அதிமுக சட்ட பிரிவு செயலாளரான இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருக்கிறார்.
செந்தில்வேலன் ஐபிஎஸ்: அந்த மனுவில் தமிழக உளவுத்துறையின் தலைவரான செந்தில்வேலன் ஐபிஎஸ்-ன் மேற்பார்வையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் உரையாடல்கள் இடைமறித்து ஒட்டு கேட்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுவதாகவும், குறிப்பாக தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக தங்களுக்கு காவல்துறையில் பணியாற்றும் சிலர் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை: சமீபத்தில் கூட 92 நாடுகளில் ஐபோன் பயனர்களை குறி வைத்து இதே போன்ற ஒரு ஒட்டு கேட்பு முயற்சி நடைபெற்றதாக கிடைத்த செய்தியை குறிப்பிட்டுள்ள அதிமுக, பெகாசஸ் போன்ற ஒரு மென்பொருளை பயன்படுத்தி தமிழக காவல்துறை உளவுத்துறையினர் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்க்கட்சித் தலைவர்களை செல்போன்களை கண்காணிக்கவும் இடைமறித்து ஒட்டு கேட்கவும் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரூ.40 கோடி சாஃப்ட்வேர்: மேலும் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சாப்ட்வேர் சட்டவிரோதமாக வாங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முக்கிய தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுநர்களின் செல்போன்கள் இந்த சாப்ட்வேர் மூலம் ஒட்டு கேட்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவரான மு.க ஸ்டாலின் கீழ் செயல்படும் உளவுத்துறை தங்களது கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் உரையாடல்களை உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மூலம் சேகரித்து முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை தேவை: உளவுத்துறையின் இந்த நியாயமற்ற செயல்பாடு நேர்மையான தேர்தல் என்ற நோக்கத்தை சிதைப்பதாகவும் உளவுத்துறை நடவடிக்கை அரசமைப்புக்கு எதிராக இருப்பதால் கருத்துரிமை சுதந்திரத்தை பறிப்பதாகவும் இருப்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications