ஆன்லைன் ரம்மி: முழு தடை சாத்தியமில்லை..வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை கொடுக்கலாம்..கார்த்தி சிதம்பரம்
வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை கொடுப்பதில் தவறு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவது என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு கிடையாது. தடை செய்வது ஒரு யுக்தியாக இருந்தாலும் அதுவே முழு தீர்வாக இருக்கும் என்று நான் நம்பவில்லை என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை கொடுப்பதில் தவறு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பியான கார்த்தி சிதம்பரம் இது தொடர்பாக கூறியதாவது:-

இந்திய பிரஜையாக இருந்தால்
வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை, கிழக்கு மாகாணாத்தில் உள்ளவருக்கு வாக்குரிமை என்பது எல்லாம் கிடையாது. இங்கே யாரு வந்து நிரந்தர முகவரியில் இருக்கிறார்களோ அவர்கள் இந்திய பிரஜையாக இருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டியதுதான். அதனால், வடமாநிலத்தவர்கள் என்று பர்க்க வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள் எத்தனையோ பேர் பெங்களூருவில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வாக்குரிமை உள்ளது
காலம் காலமாக அங்கேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்குரிமை உள்ளது. மும்பையில் இருக்கிறார்கள். இந்தியாவில் யார் வேண்டும் என்றாலும் எந்த ஊருக்கும் செல்லலாம். அதில் எந்த தடையும் விதிக்க முடியாது. இந்திய குடிமக்கள் இந்தியாவிற்குள் எங்கே வேண்டும் என்றாலும் போய் குடியேறலாம். குடியேறி அந்த ஊரிலேயே நிரந்தரமாக வந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்கு சட்ட ரீதியாக என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அதை வழங்க வேண்டியதுதான்.

கட்டுப்பாடு விதிக்க வேண்டும்
ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவது என்பதில் எந்த வித சந்தேகமும் எனக்கு கிடையாது. தடை செய்வது ஒரு யுக்தியாக இருந்தாலும் அதுவே முழு தீர்வாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. வர்த்தக பரிமாற்றம் வங்கி மூலமாகவே நடக்கிறது. நேரடியாக பரிமாற்றம் நடக்கவில்லை. பரிமாற்றத்திற்கு நிறைய கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தேசிய அளவில் ஒரு முயற்சியை எடுத்துதான் இதை தடை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் அரசியலுக்கு வருவது
முன்னதாக காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதவாது:- சமுதாய ரீதியில் பெண்களுக்கு பெற்றோர்கள் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இது நல்ல எண்ணத்திற்கான கட்டுப்பாடுதான் என்றாலும் கூட பெண்கள் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களை மதிப்பது இல்லை. அரசியல் பின்னணி இல்லாத சாதாரண பெண்கள் அரசியலுக்கு வருவது எளிதானது இல்லை.

பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்
மேடையில் பேசும் போது 33 சதவீத இட ஒதுக்கீடு என்று பேசுவோம். ஆனால் கொடுப்பது இல்லை. பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசியதால் கட்சியை சேர்ந்த 3 முன்னோடிகள் என்னுடன் சண்டை போட்டு இருக்கின்றனர். ஜெயலலிதா, இந்திரா காந்தி வாழ்ந்த ஊரில் பெண்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற முடியாதா? என்று கூறினேன். பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது பெண்கள் சாதிக்க தயங்க கூடாது"இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications