வீட்டு மனை இஎம்ஐ முறையில் வாங்க போறீங்களா.. இப்படியும் வரலாம் சிக்கல்.. என்ன செய்ய வேண்டும்?
சென்னை: தமிழ்நாட்டில் மனையை மொத்தமாக பணம் செலுத்தி வாங்க முடியாத நிலையில் பலரும் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்ககாக இஎம்ஐ செலுத்தி மனை பெறும் திட்டம் சென்னையின் புறநகர் பகுதிகள் உள்பட பல இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. பொதுவாக மனை எது என்பதை உறுதி செய்யாமல் தவணை திட்டத்தில் பணம் செலுத்தினால் பெரும் சிக்கல்கள் வரலாம்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் வீடு வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி வீட்டு மனைகள் வாங்க விரும்புவோருக்காகவே பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவணை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

இதன்படி, மொத்தமாகப் பணம் கொடுத்து வீட்டுமனை வாங்க முடியாத பொதுமக்கள், தவணைத் திட்டத்தின் மூலம் மனை வாங்கலாம். மாதாமாதம் தவணை முறையில் பணத்தைச் செலுத்தி மனையைச் சொந்தமாக்கி கொள்ளவும் முடியும். ஆனால் தவணை முறையில் நிலம் வாங்க போகிறவர்கள் சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை இப்போது பார்ப்போம்.
நீங்கள் மாதந்தோறும் இஎம்ஐ செலுத்தி தான் இடம் வாங்க போகிறீர்கள் என்பதால், வாங்க போகும் மனையை பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்க போகும் மனையின் நிலத்தை விற்பவர்கள் யார்? அந்த நிலம் எதிர்காலத்தில் எந்த அளவிற்கு வளர்ச்சி பெறும் என்பதை கவனிக்க வேண்டும். அடுத்து நீங்கள் வாங்கப் போகும் மனைக்கான ஆவணங்களை கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும். வில்லங்கச் சான்று, பட்டா, ரசீதுகள் என மனை தொடர்பான அனைத்து ஆவணங்களை பாருங்கள். குறிப்பாக மூலப் பத்திரத்தைச் சரிபாருங்கள்.
பொதுவாக தவணை முறையில் வீடு வாங்குவோருக்கு மூலப்பத்திரத்தை தரமாட்டார்கள். ஆனால் மூலப்பத்திரத்தின் நகலை வாங்கி கொள்ள முடியும். எனவே மூலப்பத்திரத்தின் ஆவணத்தை வாங்கி ஏதேனும் வில்லங்கம் உள்ளதா, வாரிசுகள் உள்ளனரா, அனைவரும் கையெழுத்து போட்டிருக்கிறார்களா, பட்டா யார் பெயரில் உள்ளது. அவர் தான் உங்களுக்கு நிலத்தை விற்கிறாரா, பவர் ஆப் அட்டர்னி பெற்றிருக்கிறாரா என்பதை சரிபாருங்கள். ஒருவேளை பவர் பெற்று விற்கிறார் என்றால், அந்த பவர் இப்போதும் உள்ளதா அல்லது ரத்து செய்யப்பட்டுவிட்டதா என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்,.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நிலத்தில் தண்ணீர் தேங்குமா, அங்கீகாரம் பெற்ற மனையா, அரசு அறிவித்துள்ளபடி அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருகிறார்களா.. என்பதை பாருங்கள். அதேபோல் ஏதோ விற்காத மனையை கடைசியில் உங்கள் தலையில் கட்ட வாய்ப்பு உள்ளது.
எனவே தவணை முறையில் மனை வாங்கும்போது ஒப்பந்தத்தை 20 ரூபாய் முத்திரைத்தாளில் பல்வேறு தகவல்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் நீங்கள் வாங்கப் போகும் வீட்டுமனையின் விலை, மாதா மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை, தவணைக் காலம் போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மிக முக்கியமான நீங்கள் வாங்கும் மனை எண்ணையும், மனையின் பரப்பளவையும் சேர்த்துக் குறிப்பிட வேண்டும். கடைசியில் ஒரு மனை என்பதை விட எந்த மனை என்பதை தெளிவாக அறிந்து வாங்குங்கள். அதேபோல் நீங்கள் வாங்கியிருக்கும் மனையின் விலை திடீரெனக் கூடும்பட்சத்தில் மீதியிருக்கும் தவணைத் தொகையை மனையை விற்பனை செய்பவர் அதிகமாக்கக்கூடும். எனவே அப்படி எல்லாம் செய்யமாட்டார் என்பதை ஒப்பந்தப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட சொல்லுங்கள்.
இதேபோல் நீங்கள் வாங்கியிருக்கும் நிலம், முன்பு விவசாயப் பயன்பாட்டிற்கான நிலமாக இருந்திருந்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதை ரியல் எஸ்டேட் செய்பவர்கள் தான் செய்து தர வேண்டும். அதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக வீட்டு மனைகளை இஎம்ஐ முறையில் வாங்கும் போது, திடீரென முழுப் பணத்தையும் செலுத்துவது நமக்கு லாபம் இல்லை. பொதுவாக பணத்தை ரொக்கமாக கொடுக்க வேண்டாம். காசோலை, வரைவோலை, அல்லது வங்கி கணக்கு மூலமாக மட்டுமே கொடுங்கள். அதில் கொடுக்கும் போதே இடத்திற்கான இஎம்ஐ என்பதை குறிப்பிடுங்கள். அப்படி செய்தால் பின்னாளில் பிரச்சனை வந்தாலும் உங்களுக்கு ஆவணமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications