தமிழக சட்டசபையில் வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல்..சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி ஆணவப்படுகொலை, காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து அதிமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.

கடந்த 20ம் தேதி 2023 -24ம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், 21ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று தொடங்குகிறது.
இன்று காலை சட்டசபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கற்குறிப்புகள், இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டசபையில் உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்துவர்.
வழக்கமாக சட்டசபை தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், இன்று கேள்வி நேரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு பொதுமக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இதனிடையே கிருஷ்ணகிரி ஆணவக்கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை பதில் அளிப்பார் என சபாநாயகர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமையும், திங்கள் கிழமையும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. பின்னர் 28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுவார்.
பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து 29ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்கி, 21ஆம் தேதி வரை மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்க இருக்கிறது. 29ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கையாக காலையில், நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையும், மாலையில் போக்குவரத்து துறையும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications