பெண்கள் கல்லூரி.. அதிகரித்த டிமாண்ட்..குழப்பத்தில் அமைச்சர் பொன்முடி!
சென்னை: திமுக உட்பட அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் முக்கியக் கோரிக்கை ஒன்றின் காரணமாக, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 10 மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், எனது தொகுதிக்கு கொடுங்க என 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து கோரிக்கைகள் குவிந்திருக்கிறதாம்.

மகளிர் கல்லூரிகள்
தங்கள் தொகுதியில் புதிதாக அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளை அமைத்துக் கொடுக்கக் கோரி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக என அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் துறை அமைச்சரான பொன்முடியிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு வசம் தற்போதைய சூழலில் 10 மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு மட்டுமே திட்டம் தயாராக இருக்கிறது. இதனால் கேட்பவர்கள் அனைவரது தொகுதிகளுக்கும் அரசு மகளிர் கல்லூரிகள் அமைத்துக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள்
இதில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வரை சென்றாவது தங்கள் தொகுதிக்கு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு மகளிர் கலை அற்வியல் கல்லூரிகளை கொண்டு வந்துவிட வேண்டும் என முயற்சித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியை சுற்றி வருகிறார்கள். இருக்கும் 10 கல்லூரிகளை யாருக்கு தான் கொடுப்பது எனத் தெரியாமல் அவர் குழப்பத்தில் இருக்கிறாராம்.

பின் தங்கிய மாவட்டங்கள்
இதனிடையே தருமபுரி, அரியலூர், ராமநாதபுரம் போன்ற பின் தங்கிய மாவட்டங்களை வளர்ச்சி அடையச் செய்யும் நோக்கில் முதற்கட்டமாக இது போன்ற மாவட்டங்களில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளை அமைக்க முதல்வர் முன்னுரிமை கொடுக்கச் சொல்லியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதனடிப்படையில் பணிகளை தொடங்கவுள்ள உயர்க்கல்வித்துறை அதிகாரிகள், கூடுதல் அரசு மகளிர் கல்லூரிகள் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்களாம்.

விவரம் கூறி
தம்மிடம் மகளிர் கல்லூரி தொடர்பாக கோரிக்கை வைக்க வரும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருக்கும் நிலைமையை விவரமாக எடுத்துரைத்து அடுத்த முறை உங்க தொகுதிக்கு ஒதுக்குவதாக பதில் சொல்லி வருகிறாராம் அமைச்சர் பொன்முடி. இருப்பினும் எப்படியாவது என் தொகுதிக்கு கல்லூரியை கொடுங்க என ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரை விட்டபாடில்லையாம்.












Click it and Unblock the Notifications