காங்கிரஸ் கட்சி தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.. யார் இந்த பவ்யா நரசிம்ம மூர்த்தி?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி. இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது. இதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரைக்கு இந்தியாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பாஜக.

அதே நேரத்தில் எதிர் கட்சியினர் ஒருங்கிணைத்து பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி அமைத்து கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி அக்கட்சி தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. வரும் லோக்சபா தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க, ராஜ்யசபாவின் மூத்த எம்.பி.யும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளளார் சோனியா காந்தி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் செல்வப் பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி, மாணிக்கம் தாகூர் எம்.பி, டாக்டர் செல்லக்குமார் எம்.பி ஆகியோரை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைத்துள்ளது. டெல்லியில் வரும் 29,30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினர் ஆற்றும் பணிகள் தொடர்பாக தொடர்பு கொள்வதில் எந்த குளறுபடிகளும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த இவர் சிறந்த கல்வியாளர் மற்றும் பொருளாதார நிபுணர். அமெரிக்காவில் பணிபுரிந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீதான ஈர்ப்பு காரணமாக அந்த கட்சியில் இணைந்தார். கர்நாடக மாநில பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளராக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற மாநிலங்களுக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் அந்தந்த மாநிலங்களில் கட்சியின் அனைத்து பிரிவுகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையுடன் இணக்கமாக இருந்து, தகவல் தொடர்பு தொடர்பான செயல்பாடுகளில் சுமுகமாக பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications