அடுத்தடுத்து “டுவிஸ்ட்” - பரபரக்கும் கதர்கள்.. ராகுல் காந்தி தகுதி நீக்கம்! காங்கிரஸ் அவசர ஆலோசனை
சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மாலை 5 மணியளவில் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
2019 கர்நாடகா மாநிலம் கோலாரில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டபோது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு அவர் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடியின் சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி
கடந்த 4 ஆண்டுகளாக ராகுல் காந்தி மீதான இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி ராகுல் காந்தியை குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதனை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி வர்மா, 30 நாட்கள் ஜாமீனும் வழங்கினார். இந்த அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

ராகுல் காந்தி பதவி பறிப்பு
அதை தொடர்ந்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை மக்களவை நிகழ்வில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது, இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை தலைமை செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்து உள்ளார்.

ஏன் தகுதி நீக்கம்?
இணைச் செயலாளர் பிசி திரிபாதி கையெழுத்துடன் இது வெளியாகி உள்ளது. மார்ச் 23 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு வயநாடு எம்பி ராகுல் காந்தி வழங்கப்பட்ட தண்டனையை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 102(1)(e) மற்றும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 இன் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் அவசர ஆலோசனை
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை மேற்கொள்கிறது. காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications