ஆமை வேக காங்கிரஸ்.. விஜய் விஷயத்தில் மட்டும் முயல் வேகம்! எல்லாத்துக்கும் அதிமுக தான் காரணம்! எப்படி?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றி கழகம். முதல் கட்சியாக தங்களது எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி இருக்கிறது காங்கிரஸ். வழக்கமாக அனைத்து விவகாரங்களிலும் ஆமை வேகத்தில் செயல்படும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுத்து இருப்பது பலரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸின் இந்த வேகமான செயல்பாட்டுக்கு அதிமுக தான் காரணம் என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் பல கணக்குகளை போட்டே உடனடியாக விஜய்க்கு ஆதரவளித்து இருப்பதாகவும் கதர் கட்சியினர் சொல்கின்றனர்.
தமிழக அரசியல் களம் தற்போது மிகப் பரபரப்பான சூழலில் இருக்கிறது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்டுவதற்காக மற்ற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது.

234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் கூடுதலாக சுமார் 10 முதல் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி திடீரென தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வழக்கமாக முடிவெடுக்க மெதுவாக செயல்படும் கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ், இந்த விஷயத்தில் மிக வேகமாக முடிவு எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசிய போது," மதச்சார்பற்ற அரசியல் நிலைப்பாட்டை பாதுகாப்பதற்காகவும், பாஜக உள்ளிட்ட சக்திகள் ஆட்சியில் பங்கேற்காமல் இருக்கவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக சொல்கின்றனர். மேலும், இந்த கூட்டணி தற்போது ஆட்சி அமைப்பதற்காக மட்டுமல்லாமல், எதிர்கால உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கும் தொடரும் வகையில் அமைக்கப்படும் என்றும் சொல்கின்றனர்.
ஆனால், காங்கிரஸ் எடுத்துள்ள முடிவின் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்கள் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றன. முதலாவது காரணம், கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெற முடியாத நிலை. இதனால் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்து மீண்டும் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அக்கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது.
இரண்டாவது காரணமாக, திமுக கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர்களுக்கு உரிய மரியாதை தரவில்லை என்ற உணர்வு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் புதிய தலைமுறையான தவெக உடன் இணைந்தால் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். மூன்றாவது காரணம் மிகவும் முக்கியமானது என அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர் ஆதரவு இருப்பதால், அந்த செல்வாக்கு தமிழகத்தைத் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் கட்சிக்கு மறைமுக ஆதாயம் தரலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.
இந்த சூழ்நிலையில், தவெக தரப்பும் மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவை பெற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சில கட்சிகள் இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.
அதேபோல், அதிமுக உடனும் தவெக தரப்பு மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது தான்.. ஒருவேளை அதிமுகவும் கூட்டணியில் இணைந்தால், காங்கிரஸ் தனது முக்கியத்துவத்தை இழக்கக்கூடும் என்ற அச்சமும் இந்த வேகமான முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், தவெகவுக்கு ஆதரவு அளித்தால் ஆட்சியில் அமைச்சர் பதவி மற்றும் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் கணக்கிடப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தல்களில் கூட்டணி மூலம் அதிக இடங்களைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தவெக அரசியல் எழுச்சி தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், இதில் எந்தெந்த கட்சிகள் இணையப் போகிறது என்பதே இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications