திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ் கட்சி நன்றி கூட தெரிவிக்காமல் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் சேர்ந்ததாக திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் திமுக தலைமையிடம் கூறிவிட்டு தான் தவெக உடன் கூட்டணி வைத்தோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் களமிறங்கியது. மொத்தம் 29 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து 2 அமைச்சர் பதவிகளை பெற்றள்ளது. அதோடு 2029 லோக்சபா தேர்தலிலும் தவெக உடன் தான் கூட்டணி என்று அறிவித்துள்ளது.

இதனை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலின், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல தலைவர்களும் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது. குறைந்தபட்சம் நன்றி கூட தெரிவிக்காமல் தவெகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு துரோகம் செய்து முதுகில் குத்திவிட்டது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் திமுக தலைமையிடம் கூறிவிட்டு தான் முதல்வர்வ விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் சேர்ந்தோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சனை நடந்தபோது ப சிதம்பரம் தான் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்ட நிலையில் இப்படி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ப சிதம்பரம் அளித்த பேட்டியில் ''காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் வென்று எதுவும் சொல்லாமல் தவெக கூட்டணியில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறதே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ப சிதம்பரம், ''நாங்கள் அவர்களிடம் (திமுக தலைமையிடம்) கூறிவிட்டு தான் வெளியேறினோம். இது எனக்கு தெரியும். இதுபற்றி இனி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை'' என்றார். இதன்மூலம் திமுக சொல்வது பொய் என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து ப சிதம்பரம் கூறுகையில், ''தமிழகத்தில் உடனடியாக மீண்டும் சட்டசபை தேர்தல் நடப்பதை மக்கள் விரும்பவில்லை. விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் இதனை புரிந்து வைத்திருந்தன. இந்த கட்சிகளுக்கு ஒருநாள் முன்பாக காங்கிரஸ் முடிவெடுத்ததால் தான் இந்த விமர்சனம் வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications